வளர்ப்பு நாயை இரத்தம் சொட்டச் சொட்ட ஸ்கூட்டரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்! கேரளாவில் பரபரப்பு
இரண்டு இளைஞர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தின் பின்னால் வளர்ப்பு நாயை கட்டி தரதரவென சாலையில் இழுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய மாநிலம் கேரளாவில் மலப்புரம் மாவட்டம் எடக்கரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் நேற்று 2 இளைஞர்கள் ஸ்கூட்டரின் பின்னால் தங்களது வளர்ப்பு நாயை கட்டி வேகமாக இழுத்து சென்றனர்.
அப்போது அந்த நாய் தடுமாறி விழுந்தது. தொடர்ந்து இழுத்து செல்லப்பட்டதால் நாயின் உடலில் காயமடைந்து கால்களில் இரத்தம் வழிந்துள்ளது.
இதைக்கண்ட அப்பகுதியினர் அந்த நபரை வழிமறித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து நாயை இழுத்து சென்றார். சிறிது நேரத்தில் அப்பகுதியினர் திரண்டு அந்த வண்டியை மடக்கி பிடித்தனர்.
மேலும் எடக்கரை பொலிஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பொலிஸார் வருவதற்குள் இருவரும் நாயுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டவர் சேவியர் என தெரியவந்தது.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சேவியரை தேடி வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சேவியர் வீட்டுக்கு விரைந்து சென்று, ரத்த காயங்களுடன் காணப்பட்ட நாய்க்கு சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள சேவியரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சேவியர் மற்றும் அவருடன் இந்த செயலில் ஈடுபட்டவர் மீது விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுக்கும் சட்டம் பிரிவு 11 (1) (A ) (தேவையற்ற வலி அல்லது துன்பங்களுக்கு உட்படுத்தும் வகையில் எந்தவொரு விலங்கையும் சித்திரவதை செய்தல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.