மின்னல் தாக்கி இறந்த சிறுவனின் குடும்பம் செய்த நெகிழ வைக்கும் செயல்: கொண்டாடும் பிரித்தானிய மக்கள்
பிளாக்பூல் பகுதியில் மின்னல் தாக்கி இறந்த சிறுவனின் உடல் உறுப்புகளை சிறார்களுக்கு தானம் செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலை சிறுவன் Jordan Banks-ன் தந்தையே வெளியிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை நேரம் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கி ஜோர்தன் இறந்துள்ளான்.
அந்த கொடூர காட்சியை சிறுவனின் வளர்ப்பு தந்தை தமது காருக்குள் இருந்து நேரடியாக பார்த்துள்ளார். இதனிடையே, சிறுவன் ஜோர்தனின் உடல் உறுப்புகள், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்த 3 சிறுவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜோர்தனின் தந்தை தமது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். பிறருக்காக தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என ஆசைப்படும் ஜோர்தன், இறந்தும் 3 சிறுவர்களை வாழவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது மகனின் மரணம் எந்த அளவுக்கு தம்மை பாதித்துள்ளது என்பதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் அவர் கண் கலங்கியுள்ளார்.
மகனை மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பனையே இழந்து விட்டதாக கூறியுள்ள ஜோர்தனின் தந்தை, பல மணி நேரம் இருவரும் ஜோர்தனின் எதிர்காலம் குறித்து விவாதித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, சிறுவன் இறப்பதற்கும் ஒரு மாதம் முன்பு, உள்ளூர் மனநல அமைப்புக்காக சுமார் 2,500 பவுண்டுகள் வரை திரட்டியுள்ளதும், அதற்காக லிவர்பூல் கால்பந்து நட்சத்திரம் James Milner பாராட்டியதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போது சிறுவன் மரணமடைந்த செய்தி வெளியானதும், James Milner தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.