ஜூலை 19க்குப் பிறகும் இது அவசியம்... பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
ஜூலை 19க்குப் பிறகும் கட்டிடங்களுக்குள்ளும், ரயில்களிலும் மாஸ்க் அணியவேண்டியிருக்கும் என்று கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நமது சுதந்திரத்தை மீட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியம் என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி விலக்கிக்கொள்ளப்பட உள்ளன.
இன்று மதியம் பத்திரிகையாளர்களை பிரதமர் இல்லம் முன்பு சந்திக்கும் போரிஸ் ஜான்சன், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், அடுத்த திங்கட்கிழமையுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த விடயங்களை உறுதிசெய்ய இருக்கிறார்.
ஆனாலும், ஜூலை 19க்குப் பிறகும், பல்பொருள் அங்காடிகள், இரயில்கள் போன்ற இடங்களில் மக்கள் மாஸ்க் அணியவேண்டியிருக்கும் என எச்சரிக்க இருக்கிறார்அவர்.
கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது கொரோனா தொற்று அதிகரிக்கத்தான் செய்யும் என்று கூறும் ஜான்சன், எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம், நமது முன்னேற்றத்தை பின்னோக்கித் தள்ளிவிடாமல் இருக்கவேண்டுமானால், நாம் அனைவரும் பொறுப்புடன் இருக்கவேண்டியது அவசியம், அத்துடன் நமது மருத்துவ அமைப்பை பாதுகாப்பதையும் நாம் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் போரிஸ் ஜான்சன், கொரோனாவுக்கும் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும் இடையிலான பிணைப்பை தடுப்பூசிகள் வலிமையிழக்கச் செய்துவிட்டன என்றாலும், உலகத்தில் கொள்ளைநோய் முற்றிலும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என பிரித்தானியர்களை எச்சரிக்க இருக்கிறார்.