மருமகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட மாமியார்! வரதட்சணை கொடுமையால் நடந்த கொடூரம்
உத்தரபிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்வதை, அவரது மாமியார் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கோமல் (25) என அறியப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்புர் ஆஷிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஆஷிஷின் குடும்பத்தினர் கோமலை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுக்கும் அளவிற்கு தாங்க முடியாத கொடுமையை அனுபவித்துள்ளார். அவர் வீட்டின் கதவுகளை உள்ளிருந்து பூட்டிவிட்டு தனது கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தொங்கும் வரை அவரது மாமியார் மற்றும் மாமனார் இருவரும் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளனர்.
"அவளாகவே தூக்கு மாட்டிக்கொள்கிறாள்" தங்களுக்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்கொலை செய்ததற்கு அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கோமலின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். பெண்ணின் தந்தை அளித்த புகாரில், "நான் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு ஒரு பைக்கும், ரூ. 5 லட்சம் பணமும் வரதட்சணையாக கொடுத்திருந்தேன். ஆனால், அவரது தந்தை தேவேந்திரா, தாய் சவிதா மற்றும் சகோதரர் சச்சின் ஆகியோர் மகிழ்ச்சியடையவில்லை. அதனால் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்கள் கோமலை வீட்டை விட்டு அடித்து வெளியேற்றினர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இரண்டு மாதனங்களுக்கு முன்பு மாமியார் சவிதா மேலும் 1.2 லட்சம் வரதட்சணையாக கேட்டுள்ளார். அதனை கொடுக்கவில்லை என்றால் தனது மகன் ஆஷிஷை வேறு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக தங்கள் குடும்பத்தை மிரட்டி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரை தொடர்ந்து அந்த பெண்ணின் மாமியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கணவர் ஆஷிஷ் மற்றும் மைத்துனர் சச்சின் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.