ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்... பெண் இரகசியமாக எடுத்த புகைப்படம் வெளியானது
ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
David Smith (57 என்ற பிரித்தானியர், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிவந்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதல், ரஷ்ய உளவுத்துறைக்காக உளவு பார்க்கும் இகசிய உளவாளியாக செயல்பட்டு வந்ததாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் Smith பிரித்தானிய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட Smithக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தம்பதியர் பிரிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
Smith, முக்கிய ஆவணம் ஒன்றை ரஷ்ய உளவுத்துறைக்கு அளித்து, அதற்காக பெரும் தொகை ஒன்றை பெற்றதாக கூறப்படுகிறது.
தான் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுவதை அறியாத Smithஐ, பொறிவைத்து பிடித்திருக்கிறார்கள் பிரித்தானிய உளவுத்துறையினர்.
இதுவரை எந்த பத்திரிகையிலும் Smithஇன் புகைப்படம் வெளியாகாத நிலையில், பெர்லினுக்கருகிலுள்ள அவரது வீட்டில் அவர் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அவரது பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் அந்த காட்சிகளை படம் பிடித்துள்ளார். பொதுவாக ஜேர்மனியில் யாரையும் கைவிலங்கிட்டுக் கைது செய்யமாட்டார்கள். ஆகவே, இந்த காட்சி வித்தியாசமாக பட்டதால் அதை புகைப்படம் எடுத்ததாக தெரிவித்துள்ளார் பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண்.
இதற்கிடையில், பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அவருடைய வீட்டில் ரஷ்ய நாட்டுக் கொடி ஒன்றும், சோவியத் இராணுவ அதிகாரிகள் அணியும் தொப்பி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.