பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம்: பெட்ரோல் நிலையங்கள் முன் நீண்ட வரிசையில் அணிவகுத்த வாகனங்கள்
பிரித்தானியாவில் பல இடங்களில் பெட்ரோல் நிலையங்கள் முன் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
பெட்ரோல் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் பெட்ரோல் நிலையங்கள் முன் குவிந்து வருகிறார்கள்.
அதற்கேற்றாற்போல், எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்களும், பெட்ரோல் மற்றும் டீசல் குறிப்பிட்ட அளவுதான் வழங்கப்படும் என்றும், பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என்றும், ஆகவே வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் பெட்ரோல் டேங்கில் குறைந்தபட்சம் கால் பங்கு அளவுக்காவது பெட்ரோல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் கூறவே பிரித்தானியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை, ஏற்கனவே 1973 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் 1978இல் வாகன ஓட்டிகள் முதலானோர் நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட எரிபொருள் விலையுயர்வு, உணவுப்பற்றாக்குறை, எரிபொருளை ரேஷன் முறையில் வழங்கியது போன்ற ஒரு சூழல் மீண்டும் உருவாகுமோ என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் முக்கிய காரணம், கனரக வாகனங்கள் ஓட்டும் சாரதிகள் பற்றாக்குறையாகும். பிரெக்சிட்டைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான கனரக வாகன சாரதிகள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிவிட்டதால், பிரித்தானியாவில் கனரக வாகன சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சாரதிகள் இல்லாததால், பெட்ரோல், டீசல் முதல் உணவுப்பொருட்கள் வரை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கூடுதலாக 100,000 சாரதிகள் வரை தேவை என்னும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்களுக்கு, புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த அளவுக்கு சாரதிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றால், ஒரு நிறுவனம் தன்னிடம் சாரதிகளாக பணியாற்றியோர் மீண்டும் பணியில் சேர்ந்தால் அவர்களுக்கு ஆண்டொன்றிற்கு 78,000 பவுண்டுகள் வரை ஊதியம் வழங்க முன்வந்துள்ளது.
அதேபோல, ஒரு காய்கறிப்பண்ணை, காய்கனிகள் பறிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு 30 பவுண்டுகள் வரை கொடுக்க முன்வந்துள்ளது. இது ஆண்டொன்றிற்கு 62,000 பவுண்டுகளுக்கு சமம்!
இதற்கிடையில், போக்குவரத்துச் செயலரான Grant Shapps, எந்த வகையிலாவது இந்த பிரச்சினைகளை தீர்க்க அரசு முயன்று வருவதாகவும், சொல்லப்போனால், கனரக வாகன சாரதிகள் பற்றாக்குறையைத் தீர்க்க, குறுகிய கால விசாக்கள் வழங்கி வெளிநாடுகளிலிருந்து சாரதிகளைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே நிலை தொடர்ந்தால் களத்தில் இறங்கிப் பணி செய்வதற்காக, அதாவது பெட்ரோல் டேங்கர்களை ஓட்டுவதற்காக, அமைச்சர்கள் இராணுவ வீரர்களை தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மக்கள் பயந்து எரிபொருள் வாங்க எரிபொருள் நிலையங்கள் முன் குவியவேண்டாம் என்று கூறியுள்ள அவர், வழக்கம் போல சாதாரணமாக நீங்கள் அன்றாட வாழ்வை நடத்துங்கள் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.