ட்ரோன் தாக்குதலுக்கு அந்த நாடு தான் காரணம்: பகிரங்கமாக குற்றம்சாட்டிய பிரித்தானியா
மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கப்பல் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் நாடுதான் முழு பொறுப்பு என பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த தாக்குதலில், பிரித்தானியர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்திலேயே வெளியுறவு செயலர் டொமினிக் ராப் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஓமன் கடற்பகுதியில் வியாழக்கிழமை இரவு எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது திட்டமிட்ட செயல் என்றே டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி சர்வதேச சட்டங்களை மீறும் செயல் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த தாக்குதலில் பிரித்தானிய உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
இன்னொருவர் ருமேனியா நாட்டவர் எனவும், அவரே கப்பலின் மாலுமி எனவும் தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு தக்குதல் முன்னெடுக்கப்படுவது முதல்முறை என்றே கூறப்படுகிறது.
ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஈரான் மறுத்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் இஸ்ரேலின் தலையீட்டையும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையிலேயே பிரித்தானிய வெளிவிவகார செயலர் டொமினிக் ராப் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை ஆதரித்து பேசியுள்ளார்.
மேலும், ஓமன் கடற்பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட சட்டவிரோத மற்றும் கொடூரமான தாக்குதலை இங்கிலாந்து கண்டிக்கிறது எனவும் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் வேண்டுமென்றே, இலக்கு வைத்து, சர்வதேச சட்டத்தை தெளிவாக ஈரான் மீறியதாக நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் கண்டிப்பாக இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கப்பல்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இருந்தே இஸ்ரேல் தொடர்புடைய மூன்று கப்பல்கள் ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.