ஜேர்மன் விமான நிலையத்தில் வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன்: சில புதிய தகவல்கள்
ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், உக்ரைன் விமானத்தை குறிவைத்து அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஜேர்மன் விமான நிலையத்தில் மர்மப் பொருள்
ஜேர்மனியின் Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர், விமான ஓடுபாதையில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, உஷாரான அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.
அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, அங்கு வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கிடப்பது தெரியவந்துள்ளது.
அந்தக் கருவியில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அது வெடிக்கவில்லை என ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அந்த ட்ரோன், உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த விமானத்தில் ராணுவ தளவாடங்கள் இருந்ததாகவும் ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்த தகவலை ஜேர்மன் நாடாளுமன்ற உள்துறை கமிட்டி உறுப்பினரான Detlef Seif மறுத்துள்ளார்.
ஒரு முக்கிய சரக்கு மையமாகவும், ரஷ்யாவுக்கு அருகிலுள்ள தனது தளத்துக்கு உபகரணங்களை வழங்க உதவும் தளமாகவும் பயன்படும் Leipzig விமான நிலையத்தை, உக்ரைன் விமானங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
ஏற்கனவே, 2024ஆம் ஆண்டு, Leipzig விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல்கள் தானாக தீப்பிடித்து எரிந்த விடயத்தின் பின்னால் ரஷ்யா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு உக்ரைன் விமானங்களும் நிற்கும் நிலையில், உக்ரைன் ரஷ்யப் போர் பின்னணியில், இந்த விடயத்தின் பின்னணியிலும் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |