ஐபிஎல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடத்த தயார்: துபாய் கிரிக்கெட் கவுன்சில் தகவல்
ஐ.பி.எல். போட்டிகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள் நடத்த தயார் என துபாய் கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
2021 இந்தியன் பிரீமியர் லீக் சீசன் மற்றும் ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையின் இரண்டாம் பாதியை நடத்திய பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள் மற்றும் பல ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு துபாய் கிரிக்கெட் கவுன்சில் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள கலீஜ் டைம்சிடம் பேசிய துபாய் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் அப்துல் ரஹ்மான் பலக்னாஸ் கூறும்போது, அண்டை நாடான ஆசிய ஜாம்பவான்களுக்கு எங்கள் நாடு சரியான நடுநிலை இடமாக இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இங்கு நடைபெறுவதே சிறந்த விஷயம். இத்தனை வருடங்களுக்கு பிறகு ஷார்ஜாவில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி நடத்தும்போது அது ஒரு போர் போல இருந்தது.
ஆனால் அது ஒரு நல்ல போர். அது ஒரு விளையாட்டுப் போர் மற்றும் அது அருமையாக இருந்தது. கிரிக்கெட் மக்களை ஒன்றிணைக்கிறது. கிரிக்கெட் நம்மை ஒன்று சேர்த்துள்ளது.
நாம் இப்படியே இருப்போம் என கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை துபாயில் நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்காக பி.சி.சி.ஐ.யில் உள்ள எனது நண்பர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.