ஜேர்மனியில் நெடுஞ்சாலையைக் கடந்த வாத்துக் குடும்பம்: கவனிக்காமல் வந்த சாரதியால் ஏற்பட்ட களேபரம்
ஜேர்மனியில் ஒரு வாத்துக்குடும்பம் நெடுஞ்சாலை ஒன்றைக் கடக்க முற்பட்டபோது, அவற்றின் மீது மோதுவதைத் தவிர்க்கும் முயற்சியில், கார்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
ஜேர்மனியின் Baden-Württemberg மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில், வாத்து ஒன்று தன் குஞ்சுகளுடன் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றைக் கடந்துள்ளது.
அந்த வாத்துக் குடும்பம் சாலையைக் கடப்பதைக் கவனித்த கார் ஒன்றின் சாரதி ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். அவருக்கு அடுத்த பாதையில் வந்த மற்றொரு காரின் சாரதியும் காரை நிறுத்தியுள்ளார். ஆனால், நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு காரின் சாரதி, தனக்கு முன்னால் சென்றவர்கள் காரை நிறுத்தியதைக் கவனிக்காமல், வேகமாக வந்து, நின்றுகொண்டிருந்த முதல் காரின் பின்னால் மோதியுள்ளார்.
பின்னால் வந்தக் கார் மோதியதில், காரில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு பேரும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்தில் கார்களுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 70,000 யூரோக்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஏன் வாத்துக்கள் சாலையைக் கடக்கின்றன? அந்தக் கேள்விக்கான பதில் எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார்கள் ஜேர்மன் அதிகாரிகள்!