பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ கடும் சிக்கலில்: சட்ட ஆலோசகர்கள் மீது பழி
பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ தமது சட்ட ஆலோசகர்களை நீக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டால் தமது அந்தஸ்தை காப்பாற்ற போராடும் இளவரசர் ஆண்ட்ரூ, தற்போதைய தமது சட்ட ஆலோசகர்களால் பின்னடைவு ஏற்படும் என அஞ்சுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2001ல் இளவரசர் ஆண்ட்ரூவால் தாம் வலுக்கட்டாயமாக உறவுக்கு இரையானதாக கூறி வர்ஜீனியா கியூஃப்ரே என்பவர் அமெரிக்காவில் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை இதுவரை கண்டுகொள்ளாமல், உரிய பதிலும் அளிக்காமல் அலைக்கழித்து வந்த இளவரசர் ஆண்ட்ரூ, தற்போது பிரித்தானிய நீதிமன்றத்தின் தலையீட்டால் சிக்கலில் உள்ளார்.
மட்டுமின்றி இந்த சட்டப்போராட்டத்தால் பல மில்லியன் பவுண்டுகள் செலவிடும் சூழலும் உருவாகியுள்ளதை இளவரசர் ஆண்ட்ரூ விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், தமது சட்டத்தரணிகள் குழுவின் தற்போதை நிலையில் தமக்கு உடன்பாடில்லை என்றே இளவரசர் ஆண்ட்ரூ கூறியுள்ளார். வர்ஜீனியா கியூஃப்ரே தொடுத்துள்ள வழக்கால் தாம் சிக்கிக்கொண்டதை அறிந்த இளவரசர் ஆண்ட்ரூ தமது அந்தஸ்துக்கு இழுக்கு வரும் என்றே அஞ்சுகிறார்.
மட்டுமின்றி இந்த விவகாரத்தில் தற்போது குடும்பத்தினரிடம் இருந்து அழுத்தம் அளிக்கப்படுவதுடன், எவரும் இந்த விவகாரத்தில் தலையிட முன்வரவில்லை என்றே கூறப்படுகிறது.
இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்காமல் மறைப்பது அரச குடும்பத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
இந்த வழக்கு காரணமாக 2019ல் இருந்தே இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.