சென்னையில் திடீரென நிலநடுக்கம்! அச்சமடைந்த மக்கள்
வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையிலும் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
சென்னையிலிருந்து வடகிழக்கில் 320 கி.மீ. தொலையில் வங்கக்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதிசெய்தது.
சென்னை, ஆந்திரா அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் நண்பகல் 12.35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம், கே.கே. நகர், அம்பத்தூர், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை அமெரிக்க நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது.
இதனால் மக்கள் அச்சத்தால் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் கூடினர். இதன் காரணமாக, சென்னையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.