ஐரோப்பாவிலேயே எளிமையான புலம்பெயர்தல் சட்டங்கள்: ஜேர்மன் அமைச்சர் அறிவிப்பு
ஜேர்மனியில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் திறன்மிகு பணியாளர்களுக்கான விதிகளை நெகிழ்த்த அந்நாடு திட்டமிட்டு வருகிறது.
இன்று எடுக்கப்பட இருக்கும் முடிவுகள்
வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் திறன்மிகு பணியாளர்களுக்கான விதிகளை நெகிழ்த்துவது தொடர்பாக, இன்று முடிவுகள் இறுதி செய்யப்பட உள்ளன.
அத்துடன், இளைஞர்கள் ஜேர்மனியில் கல்வி கற்பதை அல்லது தொழிற்பயிற்சி மேற்கொள்வதை எளிதாக்கவும் அரசு விரும்புகிறது.
ஐரோப்பாவிலேயே எளிமையான புலம்பெயர்தல் சட்டம்
இந்த விடயம் குறித்து பேசிய பொருளாதார அமைச்சரான Robert Habeck, இது ஐரோப்பாவிலேயே மிக எளிமையான புலம்பெயர்தல் சட்டமாக இருக்கும் என்றார்.
ஜேர்மனி, திறன்மிகுப்பணியாளர்களுக்கு மட்டுமல்ல, மொத்தத்தில் அனைத்துப் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது என்றார் அவர்.
பல ஆண்டுகளாக, புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும், சமநிலையற்ற புலம்பெயர்தலும் ஜேர்மனியின் பொருளாதாரம் பாதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே கொரோனா காலகட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாகவும் பிரச்சினைகளை சந்தித்துவருவதாகவும் தெரிவித்தார்.
ஜேர்மனியில் திறன்மிகுப் பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக பல நிறுவனங்கள் திணறிவரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கூட்டணி அரசு, 400,000 தகுதியான திறன்மிகுப் பணியாளர்களை வெளிநாடுகளிலிருந்து ஈர்க்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.