'மாட்டு இறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள்' பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு
சிக்கன், மட்டன், மீனை விட மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என்று மேகாலயா மாநில பாஜக அமைச்சர் சன்போர் சுலாய் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் இந்திய மாநிலம் மேகாலயாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சன்போர் சுலாய் (Sanbor Shullai ) இவ்வாறு பேசியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதல்வராக கான்ராட் சங்மா (Conrad Kongkal Sangma) உள்ளார். அங்கு கடந்த வாரம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றவர் சன்போர் சுலாய்.
இந்நிலையில் அவர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது,
''இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் மக்கள் தாங்கள் விரும்பியதை உண்பதற்கு உரிமை இருக்கிறது. மீன், கோழிக்கறி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதைவிட மாட்டிறைச்சியைச் சாப்பிடுங்கள் என்று மக்களை நான் ஊக்கப்படுத்துவேன்.
மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என ஊக்கப்படுத்துவதன் மூலம் பசுவதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும்.
அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி, மேகாலயாவுக்கு மாடுகளை அனுப்பி வைப்பதால், புதிய சட்டம் எந்தவிதத்திலும் மீறப்படாது என்று பேசுவேன்" என்று சன்போர் சுலாய் தெரிவித்தார்.