தமிழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்?
தமிழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஐவர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற முதல் கூட்டத் தொடரிலேயே இந்த அறிவிப்பு வெளியானது.
முதல் நாளான இன்று ஆளுநர் உரையை வாசித்தார், இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
குறிப்பாக முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அந்த குழுவில்,
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ,
ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்,
ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் டாக்டர் எஸ்.நாராயணன்
ஜீன் ட்ரெஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரகுராம் ராஜன்
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் டாக்டர் ரகுராம் ராஜன், டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தவர்.
உலக வங்கியின் மூத்த அதிகாரியாகப் பதவி வகித்தவர் ரகுராம் ராஜன்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் சுப்பிரமணியன்
உலக வங்கியில் முக்கியமான பதவியை வகித்த டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.
வளரும் நாடுகளின் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் அரவிந்த் சுப்பிரமணியன், உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் பொருளாதாரம் குறித்து சொல்லிக் கொடுத்து வருகிறார்.
எஸ்தர் டஃபலோ
பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்தர் டஃப்லோ, அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார்.
இவரும் இவர் கணவர் அபிஜித் பேனர்ஜியும் இணைந்து வறுமை ஒழிப்பு தொடர்பாகச் செய்த ஆய்வுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜீன் டிரெஸ்
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரெஸ், இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக செயல்பட்ட ஜீன் டிரெஸ், கிராமப்புற ஏழை மக்களுக்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் எஸ் நாராயணன்
சென்னையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் எஸ் நாராயணன், நிதி, தொழில், வர்த்தகதுறை, விவசாயம், சாலை போக்குவரத்து என பல துறைகளில் தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.