தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியா? ஓ.பன்னீர் செல்வமா? வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது.
65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.
இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந் திகதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது.
ஆனால் இதில் முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் இன்று நடைபெற்றது.
காலை 9.30 மணியளவில் தொடங்கியது.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.