ஜேர்மன் சேன்ஸலர் பங்கேற்ற பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்கள் எட்டு பேருக்கு நேர்ந்த விரும்பத்தகாத நிகழ்வு...
சமீப காலமாக, உலக நாடுகள் பலவற்றில், இரவு பார்ட்டிகளுக்கு செல்லும் இளம்பெண்களைக் குறிவைத்து ஒரு பயங்கர குற்றச்செயல் பரவலாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அதாவது இளம்பெண்கள் பானங்கள் அருந்திக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய கவனத்தை திசை திருப்பி அவர்களுடைய பானத்தில் போதை மருந்துகளை கலந்து விடுவது, அல்லது ஊசி மூலம் அவர்கள் உடலில் போதை மருந்தை செலுத்திவிடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதில் கவலைக்குரிய வியம் என்னவென்றால், அப்படி இளம்பெண்களின் உடலில் செலுத்தப்படும் அந்த மருந்தின் பெயரே, வன்புணர்வு மருந்து என்பதாகும். அதாவது, இளம்பெண்கள் உடலில் இந்த மருந்தை செலுத்தி, அவர்கள் தன்னிலை தடுமாறும்போது, அல்லது மயக்க நிலைக்கு செல்லும்போது, அவர்களை கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்வது, அவர்களிடமிருக்கும் விலையுயர்ந்த பொருட்களை திருடுவது ஆகிய குற்றச்செயல்கள் நிகழ்த்தப்படும்.
அவ்வகையில், தற்போது அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜேர்மனியின் Social Democrat Party (SPD) கட்சி நடத்திய பார்ட்டி ஒன்றிலேயே, அதுவும், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றிலேயே, எட்டு பெண்கள் வரை இதுபோல் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளன.
கட்சி பார்ட்டியிலேயே இப்படி ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து, அக்கட்சி இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.