மொத்தமாக எரித்துக் கொல்லப்பட்ட நால்வர் குடும்பம்... பொலிசார் கண்ட காட்சி: அம்பலமான பகீர் பின்னணி
இந்தியாவின் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் குடியிருந்து வந்த பங்காரு நாயுடு என்பவரின் குடும்பமே எரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் மிதிலாபுரி காலனியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு தீ விபத்தில் சிக்கியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
புதன்கிழமை காலை நடந்த இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்தனர்.
இதில், 50 வயதான பங்காரு நாயுடு, அவரது மனைவி 44 வயதான டாக்டர் நிர்மலா, இவர்களது மகன் 22 வயதான தீபக் மற்றும் 19 வயதான காஷ்யப் ஆகியோரின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை சம்பவம் என கருதிய பொலிசாருக்கு, அந்த குடியிருப்பினுள் பல இடங்களில் ரத்தக்கறை இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினரை விசாரித்த பொலிசாருக்கு, சம்பவத்தன்று அதிகாலையிலேயே பங்காரு நாயுடு வீட்டில் இருந்து சர்ச்சையான பேச்சுக்கள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
சுமார் 8 மாதங்களுக்கு முன்னரே, பங்காரு நாயுடு குடும்பம் இந்த குடியிருப்புக்கு குடித்தனம் வந்துள்ளது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பங்காரு நாயுடுவின் மூத்த மகனான தீபக் தமது பெற்றோர் மற்றும் சகோதரரை கொன்று விட்டு, நெருப்பு வைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு பொலிசார் வந்துள்ளனர்.
மன அழுத்தம் காரணமாக கடந்த பல நாட்களாக தீபக் தமது பெற்றோருடன் மோதல் போக்கையை கடைபிடித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
பொறியியல் பட்டதாரியான தீபக் டெல்லியில் குடிமுறை அரசுப் பணிக்கான தயார் படுத்தலில் ஈடுபட முயன்று வந்துள்ளார்.
ஏற்கனவே உளவியல் பாதிப்பு கொண்ட தீபக், ஒருகட்டத்தில் தமது பெற்றோரையும் சகோதரரையும் கொன்று விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர்.
மேலும், கொலையை தீ விபத்தாக மாற்ற முயன்றதும், ஆனால் பொலிசாரின் நுணுக்கமான விசாரணையில் உண்மை பின்னணி அம்பலமானதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வழக்கு தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என விசாகப்பட்டினம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.