விமானப் பயணத்தில் ஒரு புதிய புரட்சி! ரூ.700 செலவில் 130 கி.மீ பறந்து சாதனை!
அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜீஸ் (Beta Technologies) நிறுவனம் தயாரித்துள்ள ஆலியா சிஎக்ஸ் 300 (Alia CX 300) என்ற முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானம், அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
ஈஸ்ட் ஹாம்ப்டனில் இருந்து நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி (JFK) விமான நிலையம் வரையிலான 130 கிலோமீட்டர் தூரத்தை, வெறும் ₹700 (சுமார் $8 அமெரிக்க டாலர்கள்) மின்சாரச் செலவில் கடந்துள்ளது.
இதே தூரத்தை ஹெலிகாப்டர் மூலம் கடக்க பொதுவாக ₹13,885 (சுமார் $160 அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் பயணத்தில் ஒரு புதிய புரட்சி!
முழுக்க முழுக்க பற்றரி மூலம் இயங்கும் இந்த நவீன விமானத்தில் நான்கு பயணிகள் பயணித்தனர். வழக்கமான விமானங்களில் ஏற்படும் இன்ஜின் மற்றும் புரொபல்லர் சத்தம் இன்றி, அமைதியாகவும் சீராகவும் பயணம் அமைந்ததாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து பீட்டா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான கைல் கிளார்க் (Kyle Clark) கூறுகையில், "இது 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் விமானம். ஈஸ்ட் ஹாம்ப்டனில் இருந்து JFK விமான நிலையத்திற்கு வெற்றிகரமாக பறந்துள்ளது.
அமெரிக்காவில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானத்தை உருவாக்கி நாங்கள் வரலாறு படைத்துள்ளோம்" என்று பெருமையுடன் கூறினார்.
நிலையான மற்றும் சிக்கனமான எதிர்காலம்!
இது இயங்கு செலவுகளை கணிசமாகக் குறைப்பதுடன், சுற்றுச்சூழலிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, பீட்டா டெக்னாலஜீஸ் நிறுவனம் அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடமிருந்து (FAA) சான்றிதழைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
சான்றிதழ் கிடைத்தவுடன், ஆலியா சிஎக்ஸ் 300 விமானம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கடல் மைல்கள் (nautical miles) தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது.
ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) வெளியிட்டுள்ள இந்தத் தகவல், நிலையான மற்றும் செலவு குறைந்த விமானப் போக்குவரத்து எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |