சீனாவுடன் போர் மூளும்... ஜோ பைடன் நிர்வாகம் குறித்து டிரம்ப் ஆருடம்
மிகவும் பலவீனமான ஊழல் கறை படிந்த அரசு தற்போது அமெரிக்காவில் அமைந்துள்ளதால், சீனாவுடன் போர் மூளும் அபாயம் அதிகம் என முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் குழு ஒன்று சுவிட்சர்லாந்தில் சந்தித்து பேச இருக்கிறது. தைவான் வான் எல்லை அருகே சீனா ராணுவத்தினர் முன்னெடுக்கும் தீவிர பயிற்சிகள்,
வர்த்தகம், கொரோனா பரவல், சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீன ராணுவ நகர்வுகள் மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் இரு நாடுகளும் விவாதிக்க உள்ளன.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தேர்தல் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் மிகுந்த தலைமையைக் கொண்டிருக்கிறது.
இதனால் சீனா அமெரிக்காவை மதிப்பதில்லை. இதே நிலை நீடிக்கும் என்றால் சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என்று தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய விவகாரத்தை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தாலிபான்களிடம் அமெரிக்கா சரணடைந்துவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தீவிர இடது ஜனநாயகக் கட்சியினர், தேர்தல் மற்றும் குற்றச் செயல்களில் முறைகேடு செய்வதில் வல்லவர்கள், எப்போதும் ஊழல் சட்டத்தரணிகள் மற்றும் வழக்குகள் மூலம் எதிர் தரப்பை குற்றம் சாட்டுகிறார்கள், அவர்களால் நமது தேசம் அழிக்கப்படுகிறது என்றார்.