டி20 தொடரையும் இழந்த இலங்கை அணி: தசுன் ஷானகா கூறிய காரணம்
நாங்கள் பல விடயங்களை சரியாக செய்தோம், அதனால் நான் மழையை குறை கூற மாட்டேன் என இலங்கையின் தசுன் ஷானகா தோல்விக்கு பின் தெரிவித்தார்.
பவன் ரத்னயகே 40 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணியில் நிசங்கா அதிரடியாக 34 (22) ஓட்டங்களும், பவன் ரத்னயகே 40 (22) ஓட்டங்களும் விளாச, 20 ஓவர்களில் 189 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், வில் ஜேக்ஸ், டாவ்சன் மற்றும் ரஷீத் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இங்கிலாந்து அணி களமிறங்க, மழை காரணமாக 17 ஓவர்களில் 168 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
பத்திரனா ஓவரில் சால்ட் 1 ரன்னில் அவுட் ஆக, பெத்தேல் 13 ஓட்டங்களில் ஷானகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும் அணித்தலைவர் ஹாரி ப்ரூக் (Harry Brook), டாம் பான்டோன் (Tom Banton) இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
பான்டோன் அபாரம்
அடுத்து வந்த சாம் கர்ரனும் அதிரடியில் மிரட்ட, இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாம் பான்டோன் 33 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்களும், சாம் கர்ரன் 20 (14) ஓட்டங்களும் விளாசினர்.

இங்கிலாந்து தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற டி20 தொடரை கைப்பற்றியது. முன்னதாக ஒருநாள் தொடரை வென்றிருந்தது.
தசுன் ஷானகா
தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா, "நாங்கள் பல விடயங்களை சரியாக செய்தோம், அதனால் நான் மழையை குறை கூற மாட்டேன். இஷான் மலிங்காவின் காயம் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
அவர் ஒரு மிக சிறந்த டெத் பந்துவீச்சாளர், அவரை ஆட்டத்தின் நடுவில் இழந்தது எங்களை பாதித்தது. துடுப்பாட்ட செயல்பாடு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ரத்நாயகே மிகவும் சிறப்பாக விளையாடினார்.
அசலங்கா ஆட்டத்தை நன்றாக முடித்து வைத்தார். மேலும் குசால் மெண்டிஸ், ஹசரங்கா, கமில் மற்றும் நிசங்கா என அனைவரும் நல்ல தொடக்கத்தை அளித்து பங்களித்தனர். நாங்கள் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய சில ஓவர்கள் இருந்தன, ஆனால் அடில் ரஷீத் நன்றாக பந்துவீசினார்.
ஒருவேளை நாங்கள் அவரை இன்னும் கொஞ்சம் மதித்து ஆடியிருக்க வேண்டும். இங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் சொந்த மைதான அனுகூலம் காரணமாக சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது ஒரு சவால் என்பது எங்களுக்குத் தெரியும்.
பொதுவாக, வருகை தரும் அணிகளுக்குக் கூட ரன் விகிதம் குறைவாகவே உள்ளது. ஆனால் அதை நாங்கள் மேம்படுத்த விரும்புகிறோம்" என தெரிவித்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை பல்லேகெல்லேவில் நடைபெற உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |