உலகக் கிண்ணம் இங்கிலாந்து ஆட்டம்... சிறார்களை எச்சரித்த கல்வி அமைச்சர்
இங்கிலாந்து அணியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகக் சிறார்கள் இரவு வெகுநேரம் விழித்திருந்தாலும், திங்கட்கிழமையன்று அவர்களைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு விடுப்பு
மெக்சிகோவுடனான முக்கியமான உலகக் கிண்ணம் மோதலின் அதிகாலை 1 மணி ஆட்டத்தை எவ்வாறு கையாள்வது என்று குடும்பங்களுக்குக் கூற விரும்பவில்லை எனவும் கல்வித்துறை அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறார்கள் தொடர்பில் பெற்றோர்கள் பள்ளிக்கு விடுப்பு கடிதம் எழுத வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் மேலாளர் தாமஸ் டுசெல் கூறியபோதிலும், காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியின் நேரம் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை நியாயப்படுத்தாது என்று அமைச்சர் பிலிப்சன் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து ஆட்டத்தை முன்னிட்டு மதுக்கூடங்கள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று அரசு திடீரென தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகின.
அவசரச் சட்டத் திருத்தத்தின் மூலம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் ஸ்டார்மர் அறிவித்திருந்தார். இதனால் 5 மணி வரையில் கடைகள் திறந்திருக்க தனியாக சிறப்பு அனுமதிக் கோரத் தேவையில்லை.
இருப்பினும், இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்றும் பணியாளர்களை ஒருங்கிணைப்பதற்கு போதுமான அவகாசம் கிடைக்கவில்லை என்றும் சில மதுக்கூட உரிமையாளர்கள் குறை கூறியுள்ளனர்.

பெற்றோர் தீர்மானிப்பார்கள்
இதனிடையே, போட்டி முடிவுகளைக் கொண்டாடும் அல்லது அது குறித்த கவலையைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், ஏற்படக்கூடிய எவ்விதச் சிக்கல்களையும் எதிர்கொள்ளத் தயாராவதற்குத் தங்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சர் பிலிப்சன் தெரிவிக்கையில், ஒவ்வொரு குடும்பமும், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு எது சரி என்பதைத் தீர்மானிப்பார்கள். தனிப்பட்ட முறையில், இரவு 10 மணிக்கு ஆட்டம் தொடங்கினால்கூட எங்களுக்கு அது சற்று சிரமந்தான் என்றார்.

மறுநாள் குழந்தைகள் பள்ளிக்கு வராத பட்சத்தில், தலைமை ஆசிரியர்கள் சலுகை காட்ட வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர்,
கால்பந்து போட்டியைப் பார்ப்பது குறித்து நாங்கள் என்ன முடிவு செய்தாலும், திங்கட்கிழமை எனது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை நான் உறுதி செய்வேன் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |