பிரித்தானியாவில் மே 17 திகதி முதல் கட்டுப்பாடுகளில் புதிய மாற்றம்! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் எதிர்வரும் மே 17ம் திகதி முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்த அரசாங்கத்தின் புதிய திட்டம் தெரியவந்துள்ளது.
புதிய திட்டங்களின் கீழ், மே 17 முதல் நாட்டில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் குடும்பங்களும் நண்பர்களும் வரம்பற்ற எண்ணிக்கையில் மறைந்த உறவினருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தலாம்.
தற்போது பிரித்தானியாவில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளின் படி, இறுதி சடங்குகளில் 30 பேர் வரை மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
பிரித்தானியா அரசாங்கத்தின் படிபடியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் கீழ், ஜூன் மாதம் தான் இந்த கட்டுப்பாட்டை தளர்த்த திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது நாட்டில் தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக, திட்டமிட்டதை விட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, 30 நபர்கள் மட்டுமே இறுதி சடங்கில் கலந்துக்கொள் அனுமதி என்ற கட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
இறுதி சடங்கு நடக்கும் இடத்தில் பாதுகாப்பாக எத்தனை பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியுமோ, அத்தனை பேர் வரை கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பிரித்தானியாவில் தற்போது திருமணங்களில் 15 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மே 17ம் திகதி முதல் 30 பேர் வரை கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
ஜூன் மாதம் முதல் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.