இலவச குளிர்சாதன பெட்டி; தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே 75% வேலை - அதிமுக தேர்தல் அறிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் tதேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். இதில், 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கை
வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர் பதன பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் விலையில்லா தரமான சேலையும், ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000/- ரூபாய் வழங்கப்படும்.
குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ. 2,000/-வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
நகரப் பகுதிகளில் சொந்த வீடு இவ்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.
ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி. அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி நாட்கள் 150 ஆக உயர்த்தப்படும்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ரூ.25,000 மானியத்தில் 5 லட்சம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
கல்வி, மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு உதவும் முக்கிய துறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் - பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ் நாட்டில் இயங்கும் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்.
தமிழ் நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மொழியாக உள்ள, தமிழ் மொழி உட்பட அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக அறிவித்து, ஆட்சி மொழி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்.
எந்த நேரத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி, அம்மா ரோந்து வாகனங்கள், மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அரசு சார்பில் தனி செயலி உருவாக்கப்படும். உணவுப் பொருள் டெலிவரி தொழிலாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆன்லைன் சேவை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், 'தற்காலிக ஒப்பந்த வேலை அல்லது செயலி அடிப்படையிலான தற்காலிக தொழிலாளர்களுக்கான நலத் திட்ட வாரியம்' ஏற்படுத்தப்படும்.
அத்தகைய தொழிலாளர்களுக்கு நிலையான வருமானம், மருத்துவ பாதுகாப்பு, விபத்துக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற அடிப்படை சமூக பாதுகாப்பு வழங்கப்படும்.
படித்த இளைஞர்களின் திறன் வளர்ப்புக்கென (Skill Development) தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு புதிய தொழில்நுட்பத்துடன் ஆன்லைன் (Online) திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவான, கச்சத் தீவை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு “இரட்டைக் குடியுரிமை" (Dual Citizenship) வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மின்கம்பங்களுக்குக் காத்திருக்காமல், அவர்கள் விரும்பினால் நேரடியாக 100% அரசு மானியத்தில் "சூரிய ஒளி பம்ப் செட்டுகள்" வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |