ஸ்வீடன் அழகியுடன்... அனில் அம்பானிக்கு பாரிஸ் நகரில் விருந்து தயார் செய்த எப்ஸ்டீன்
உலக நாடுகளில் பெரும் செல்வாக்குடன் வலம் வரும் பல பேர்களுடன் எப்ஸ்டீன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், அந்த ஆவணங்கள் தற்போது வெளியாகி பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அம்பானிக்கு எப்ஸ்டீன் விருந்து
இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரும் தொழிலதிபரான அனில் அம்பானி ஆகியோரின் பெயர்களும் சமீபத்தில் வெளியாகியுள்ள எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாரிஸ் நகரில் அனில் அம்பானிக்கு எப்ஸ்டீன் அளிக்க முன்வந்த விருந்து தொடர்பிலேயே தற்போது சமூக ஊடகங்களில் இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்க இந்திய தொழிலதிபராக இருந்த அனில் அம்பானியுடன் எப்ஸ்டீன் பரிமாறிக்கொண்ட குறுந்தகவல்கள் 2017 ஆம் ஆண்டின் முற்பகுதி முதல் 2019 ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளது.
அதாவது எப்ஸ்டீன் மீது சிறார் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை அனில் அம்பானியுடன் எப்ஸ்டீன் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த இருவரும் உலக நிகழ்வுகள், வணிகம் மற்றும் பெண்கள் பற்றிப் பேசியுள்ளனர், மேலும் நேரில் சந்திப்பதற்குத் திட்டமிட்டனர். மட்டுமின்றி, 2017 ஆம் ஆண்டில், எப்ஸ்டீன் புகழ்பெற்ற அம்பானி குடும்பத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள பல புத்தகங்களும் வாங்கியுள்ளார்.
இந்த நிலையிலேயே, 2017 மார்ச் 9 ஆம் திகதி அனில் அம்பானி எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலாக, ஸ்வீடன் அழகி ஒருவர் உங்களுடன் நேரத்தை செலவிட தயாராக இருக்கிறார் என எப்ஸ்டீன் பதிலளித்துள்ளார்.
ஆனால், அடுத்த 20 நொடிகளில் சரி என அனில் அம்பானியும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் அந்த சந்திப்பு அப்போது முடியாமல் போயுள்ளது.
அதன் பின்னர் 2019 மே மாதம் மன்ஹாட்டனின் அப்பர் ஈஸ்ட் சைடில் உள்ள எப்ஸ்டீனின் குடியிருப்பில் இருவரும் சந்தித்துள்ளனர். ஆனால் அதே ஆண்டு அவர் ஃபெடரல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக இருக்கும் போது சடலமாக மீட்கப்பட்டார்.
எப்ஸ்டீன் நட்பு பாராட்டிய முக்கியப் பிரமுகர்கள் குறித்த ஒரு விரிவான விசாரணை, வால் ஸ்ட்ரீட், வாஷிங்டன் மற்றும் சட்டத் துறை ஆகியவற்றை ஆட்கொண்டு வருகிறது.
சிறைத் தண்டனையிலிருந்து
ஆனால் அவரது தொடர்பு எல்லை அமெரிக்காவிற்கு அப்பாலும் பரவியிருந்தது. ஒரு காலத்தில் கோடீஸ்வரராக இருந்த அனில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, சமீபத்திய ஆண்டுகளில் ஏறக்குறைய முழுவதுமாக கரைந்துவிட்டது.
2019-ஆம் ஆண்டில், அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் செலுத்தப்படாத பாக்கிகளுக்காக வழக்குத் தொடர்ந்த ஒரு விற்பனையாளருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்ட 80 மில்லியன் டொலர் தொகையை சகோதரரான முகேஷ் அம்பானி கடைசி நேரத்தில் செலுத்தியதால், அவர் சிறைத் தண்டனையிலிருந்து நூலிழையில் தப்பினார்.

இது அந்தப் பெரும் கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட ஒரு அசாதாரண வீழ்ச்சியாகும். அனில் அம்பானி இந்தியாவில் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாகி வருகிறார்.
புதன்கிழமை அன்று, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட 400 பில்லியன் ரூபாய் (4.4 பில்லியன் டொலர்) வங்கி கடன் மோசடி குறித்த விசாரணையை விரைவுபடுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |