கலவரத்தில் முடிந்த கலாச்சார விழா... ஜேர்மனியில் பொலிசார் மீது கற்கள் வீச்சு
ஜேர்மனியில் Giessen நகரில் நடந்த எரித்திரியன் கலாச்சார விழாவை சீர்குலைக்க முயன்ற கூட்டத்தை கலைக்க நூற்றுக்கணக்கான ஜேர்மன் பொலிசார் தடியடி நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் பரப்புரை கொண்டாட்டம்
சர்வாதிகார எரித்திரிய அரசாங்கத்தின் வெறும் பரப்புரை கொண்டாட்டம் என விமர்சித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், கலாச்சார விழாவை முன்னெடுத்து செல்வதில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
Image: Helmut Fricke
சனிக்கிழமை நடந்த இந்த கலாச்சார விழாவில், திடீரென்று கலவரம் வெடிக்கவும், கட்டுக்குள் கொண்டுவர பல மணி நேரமானதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 26 பொலிஸ் அதிகாரிகள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
அத்துடன் கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், போக்குவரத்தும் முடக்கப்பட்டது. பொலிசார் வெளியிட்ட தகவலில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிசார் மீது போத்தல்கள் மற்றும் கற்களை வீசியதாகவும், சில வாகனங்களை சேதப்படுத்தியதுடன் விழா நடைபெறும் இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகளையும் அகற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.
தடையை ரத்து செய்த நீதிமன்றம்
கடந்த ஆண்டும் இதே போல் கலவரம் வெடித்ததையடுத்து, விழாவை நிறுத்த நகராட்சி அதிகாரிகள் முயற்சித்தனர், ஆனால் உள்ளூர் நீதிமன்றம் தடையை ரத்து செய்தது.
Image: Helmut Fricke
சுமார் 84,000 குடியிருப்பாளர்களை கொண்ட Giessen பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவானது எரித்திரியா தூதரகம் சார்பில் நடத்தப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனி பல எரித்திரிய மக்களுக்கு புகலிடம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |