வெளிநாடு ஒன்றிலிருந்து ஜேர்மன் குடிமக்கள் உடனடியாக வெளியேற வலியுறுத்தல்: முற்றும் உள்நாட்டு யுத்தம்
எத்தியோப்பியா நாட்டிலிருக்கும் ஜேர்மன் குடிமக்கள், உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.
எத்தியோப்பியா, உள்நாட்டு யுத்தம் ஒன்றை சந்தித்து வருகிறது. அந்நாட்டிலுள்ள திக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பினர், அரசு படைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
பல நகரங்களை அந்த அமைப்பினர் கைப்பற்றிவிட்ட நிலையில், அவர்கள், தலைநகர் அடிஸ் அபாபாவை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, ஜேர்மனி மட்டுமின்றி அமெரிக்கா முதலான பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.
ஆனால், அடிஸ் அபாபாவின் பாதுகாப்பு அமைப்பான Addis Ababa Peace and Security Bureauவின் தலைவரான Kenea Yadeta, மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் தெரிவிப்பதுபோல அல்லாமல் நகரம் அமைதியாக இருப்பதாகவும், ஆகவே பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலர்கள் கவலைப்படவோ பயப்படவோ வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரான எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed, திக்ரே மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை கட்டுப்படுத்துவதற்காக, வடக்கு பகுதியான திக்ரே பகுதிக்கு இராணுவத்தை அனுப்பியதைத் தொடர்ந்து நாட்டில் பிரச்சினை வெடித்தது.
2020ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சண்டை தொடங்கியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த சண்டை பல்லாயிரக்கணக்கானோரை பஞ்சத்தின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, 2 மில்லியனுக்கும் அதிகமானோர் எத்தியோப்பியாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.