ரஷ்யா தொடர்பால் இந்தியாவை மிரட்டிய ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலை அம்பலம்
மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பாசாங்குத்தனமும் இரட்டை நிலைப்பாடும் அம்பலமாகியுள்ளது.
உரங்களின் இறக்குமதி
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவைக் கோரிய நாடுகளும், உக்ரைன் போரை அடுத்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சுறுத்திய நாடுகளும், ரஷ்ய உரங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளாக உருவெடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் மோசமான விடயம் என்னவென்றால், போரின் போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட நைட்ரஜன் நிறைந்த உரங்களின் இறக்குமதி அதிகரித்து சாதனை அளவைத் தொட்டுள்ளது.
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் உயர்ந்த தார்மீக நிலையை எடுத்துக்கொண்டு, மற்ற அனைத்து நாடுகளும் ரஷ்யாவுடன் எந்தவிதமான பொருளாதார உறவையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இது நடந்துள்ளது.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த உடனேயே பொருளாதாரத் தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம் 43.9 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்ததுடன், 91.2 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை இறக்குமதியும் செய்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து உரங்களை இறக்குமதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்கு 2022 இல் 17 சதவீதமாக இருந்து, தற்போது அது சுமார் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறக்குமதி 33 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து சுமார் 2 பில்லியன் டொலர் அல்லது 1.75 பில்லியன் யூரோவாக உயர்ந்தது.
உக்ரைன் போர்
வெளியான அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் ரஷ்யா மொத்தம் 15.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள உரங்களை ஏற்றுமதி செய்து, உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாறியது.
இதனிடையே, ரஷ்ய உரங்களின் ஏற்றுமதி வளர்ச்சியைத் தடுக்கவும், உறுப்பு நாடுகளின் உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்கவும், ஐரோப்பிய நாடாளுமன்றம் ரஷ்யா மற்றும் பெலாரஸிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களுக்கு 6.5 சதவீத வரியை அறிமுகப்படுத்தும் ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவை அங்கீகரித்தது.
மேலும், 2028 ஆம் ஆண்டுக்குள் வரி விகிதம் படிப்படியாக 50 சதவீதமாக அதிகரிக்கப்படலாம். வெளியான தரவுகளின் அடிப்படையில், உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இந்தியா 112.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியது.
இது 2024 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உர இறக்குமதிக்கான தொகை யூரோ 1.75 பில்லியனை விடக் குறைவு. மேலும், பிப்ரவரி 2022 முதல் இந்தியா இறக்குமதி செய்ததை விட ஆறு மடங்கு புதைபடிவ எரிபொருளை ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |