புலம்பெயர்தல் எதிர்ப்பு வாக்கெடுப்பு... சுவிஸ் மக்கள் முடிவை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்த பிரேரணையை சுவிஸ் மக்கள் நிராகரித்துள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் பிரேரணை ஒன்றை முன்வைத்தது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் அந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
நேற்று அந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், சுவிஸ் மக்கள் அந்த பிரேரணையை நிராகரித்துவிட்டார்கள்.
ஆம், ஆந்த பிரேரணைக்கு எதிராக 54.79 சதவிகித மக்கள் வாக்களிக்க, ஆதரவாக 45.21 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள்.
மக்கள் முடிவுக்கு வரவேற்பு
இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரான உர்சுலா (Ursula von der Leyen) , சுவிஸ் மக்கள் அந்த பிரேரணை தொடர்பில் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ளார்.

சுவிஸ் மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான ஆழ்ந்த உறவுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் அவர்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் சுவிட்சர்லாந்தும் நெருங்கிய உறவுகளாலும் வலுவான கூட்டாண்மையாலும் பிணைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ள உர்சுலா, குடிமக்கள் மற்றும் தொழில்களின் நலனுக்காக இந்தக் கூட்டாண்மை நவீனமயமாக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல, சுவிட்சர்லாந்துடனான உறவுகளுக்கான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தூதுக்குழுவின் தலைவரான நோர்பர்ட் (Norbert Lins), சுவிஸ் மக்களின் முடிவை வரவேற்றுள்ளதுடன், இந்த பிரேரணை நிராகரிக்கப்பட்டது இருதரப்பு உறவுகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை அகற்றுவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து இடையேயான உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய இருதரப்பு ஒப்பந்தங்களின் தொகுப்பு தொடர்பில் நாம் இப்போது உறுதியுடன் முன்னேறி, நமது உறவுகளுக்கு ஒரு நிலையான மற்றும் நீடித்த அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |