யூரோ 2020 இங்கிலாந்தின் அரையிறுதி: எத்தனை ரசிகர்களுக்கு Wembleyல் அனுமதி?
உக்ரைனுக்கு எதிரான 4-0 என்கிற அசாதாரண வெற்றியைத் தொடர்ந்து, யூரோ 2020-ன் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் கால்பந்து அணி டென்மார்க்கை எதிர்த்து போட்டியிருக்கிறது.
இந்த ஆட்டம் லண்டனில் உள்ள வெம்ப்லி அரங்கத்தில் வரும் ஜூலை 7-ஆம் திகதி, புதன்கிழமை (உள்ளூர் நேரப்படி) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், 1966-க்குப் பிறகு முதல் முறையாக ஒரு இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் காரணாமாக நாடுகளுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், பிரித்தானிய ரசிகர்களால் இத்தாலிக்கு பயணிக்க முடியாமல் போனது. அதனால், ரோம் நகரின் ஒலிம்பிக்கோ அரங்கத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை எதிர்த்து அசாதாரண வெற்றியை பெற்ற போது, அரங்கத்தில் இங்கிலாந்தின் வெற்றியைக் கொண்டாட குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே இருந்தனர்.
பெரும்பாலான இங்கிலாந்து ரசிகர்கள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து, தங்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டனர். இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால், அடுத்ததாக உள்ளூரில் நடைபெறவுள்ள டென்மார்க் எதிரான அரையிறுதி ஆட்டத்தை இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், வரும் புதன்கிழமை வெம்ப்லி அரங்கத்தில் எத்தனை ரசிகர்கள் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
லண்டன் வெம்ப்லி அரங்கத்தில் இதுவரை 5 யூரோ 2020 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக ஜேர்மனிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்ற போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தின்போது, அரங்கத்தில் 41,973 ரசிகர்கள் இருந்தனர்.
ஜூலை 6-ஆம் திகதி நடைபெறவுள்ள இத்தாலிக்கு vs ஸ்பெயின், ஜூலை 7-ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்து vs டென்மார்க் ஆகிய இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் ஜூலை 11-ஆம் திகதி நடக்கவுள்ள இறுதி ஆட்டம் ஆகிய கடைசி மூன்று பெரிய போட்டிகளும் வெம்ப்லி அரங்கத்தில் தான் நடைபெறவுள்ளன.
இந்த 3 போட்டிகளுக்கும் அரங்கத்தில் 75% இருக்கைகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள், அதாவது 60,000 பேர் ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.