யூரோ கால்பந்து! இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நுழைந்த இத்தாலி: பெனால்டி ஷூட்டில் அபார வெற்றி
யூரோ கால்பந்து தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தி, இத்தாலி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஐரோப்பிய அணிகள் கலந்து கொள்ளும் 16-வது யூரோ கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பான மற்றும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதில் லீக் சுற்று, நாக் அவுட் சுற்று அதன் பின் கால் இறுதி சுற்றுகள் முடிந்துவிட்டதால், அரையிறுதி சுற்றுக்கு இத்தாலி மற்றும் ஸ்பெயினும், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் தகுதி பெற்றன.
இதையடுத்து நேற்று உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது. அப்போது ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகள் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்கவில்லை.
அதன் பின் ஆட்டத்தின் இரண்டாவது பாதியின், 60-வது நிமிடத்தில், இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடிக்க, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
இதனால் ஆட்ட முடிவில் இரு அணிகளும், தலா 1-1 என்று சமநிலை வகித்தன. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் இரு அணிகள் கோல் அடிக்காத காரணத்தினால், வெற்றியாளரை நிர்ணயிப்பதற்கு பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக இத்தாலி நுழைந்தது. மேலும் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதும் மற்றொரு அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது குறிப்ப்டத்தக்கது.