ஜேர்மனியில் குறைந்து வரும் கோவிட் தொற்று; ஊரடங்கை தளர்த்த திட்டம்!
ஜேர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தலைநகர் பெர்லின் உட்பட பல ஜேர்மன் மாநிலங்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உரடங்கில் உள்ளன.
இந்த நிலையில், புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், வரவிருக்கும் நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த ஜேர்மன் அரசு திட்டமிட்டுள்ளன.
ஜேர்மனியில் செவ்வாய்கிழமையன்று புதிதாக 6,125 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஜேர்மனியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,533,376-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஜேர்மனியின் மொத்த இறப்பு எண்ணிக்கை 85,112 ஆகும்.
ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு 100,000 பேருக்கு 141 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 115-ஆக குறைந்தது. இது இந்த மாதத்தில் மிக மிகக் குறைந்த பாதிப்பு விகிதம் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழே இருந்தால், மே 19 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கும், ஷாப்பிங் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும்,
மே 21 முதல் வெளிப்புற உணவகங்களுக்கு அனுமதிப்பதற்கும் பெர்லின் மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது. அதேபோல், இது செவ்வாயன்று ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பாதிப்பு எண்ணிக்கை 94-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரைன்லேண்ட்-பாலாட்டினேட் போன்ற பிற மாநிலங்களில் புதன்கிழமை முதல் மூன்று கட்ட தளர்வு திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளன. உட்புற உணவகங்கள் ஜூன் 2-ஆம் தேதி முதல் 50 சதவீதம் திறக்கப்படவுள்ளன. அதாவது 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகத்தை முழுநேரம் இயக்க அனுமதிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், கூட்டாட்சி மாநிலங்கள் தளர்வுகளை கொண்டுவரலாம், குறிப்பாக வெளிப்புற நடவடிக்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தலாம், ஆனால் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இருக்கும் என எச்சரித்தார்.