ஐரோப்பாவின் கொடிய வெப்ப அலைக்கு காரணம் அவர்களே: விமர்சிக்கப்பட்ட பிரெஞ்சு அரசியல்வாதி
கடந்த வாரம் ஐரோப்பாவைத் தாக்கிய கொடிய வெப்ப அலைக்கு அமெரிக்காவைக் குற்றம் சாட்டியதன் மூலம், பாரிஸ் துணை மேயர் ஆட்ரி புல்வர் இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
நீங்களே பொறுப்பு
வார இறுதியில் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், புல்வர் அமெரிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் குறித்துப் புகார் தெரிவித்திருந்தார்.

பாரிஸ் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பின் ஒவ்வொரு அறையிலும் ஏசி இல்லை என்பதால், அவர்கள் அந்நகரத்தை விமர்சித்தும் கேலி செய்தும் வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரான்சில் உள்ள வீடுகளில் சுமார் 25 சதவீதம் மட்டுமே குளிரூட்டும் வசதியைக் கொண்டுள்ளன. இது ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளை விடவும் பின்தங்கியுள்ளது.
ஐரோப்பா கண்டம் முழுவதும் வெப்பத்தால் 1,300 பேர் மரணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வாரம் புதன் முதல் வெள்ளி வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸ் 1,000 கூடுதல் இறப்புகளைப் பதிவுசெய்து, சாதனை அளவுகளை முறியடித்துள்ளது.
தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு நகரம் புதன்கிழமை அன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமான வெப்பநிலையைப் பதிவு செய்தது. இந்த நிலையிலேயே வெப்ப அலைக்கு அமெரிக்கர்களே காரணம் என புல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
உலகிலேயே பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் இரண்டாவது நாடாக இருப்பதால், புவி வெப்பமடைதலுக்கும், பிரான்சில் நாங்கள் எதிர்கொள்ளும் அதன் விளைவுகளுக்கும் நீங்கள் குறிப்பிடத்தக்க பொறுப்பை ஏற்கிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்காவின் ஏசி (AC) பயன்பாட்டு மிகுதிக்கும் இதற்கும் தொடர்பு இல்லாமல் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், சமூக ஊடகங்களில் அமெரிக்கர்களால் அவர் கடுமையாகக் கேலி செய்யப்பட்டார்; அமெரிக்கா ஆண்டுக்கு சுமார் 6 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை (CO2) வெளியேற்றும் நிலையில், சுமார் 12 பில்லியன் டன் வெளியேற்றும் சீனாவையே அவர் விமர்சித்திருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
நன்மை அடையும்
தனது பதிவின் மீதமுள்ள பகுதியில், நகரத்தைப் பசுமையாக்க பாரிஸ் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டியதோடு, ஏசி வெப்பமான வானிலையின் 'பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது' என்பதால், அதைக் குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும் என்றும் புல்வர் கூறியுள்ளார்.
மேலும், பாரிஸ் மற்றும் பல ஐரோப்பிய நகரங்களைப் போலவே ஒவ்வொரு அமெரிக்க நகரமும் சூழலியல் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டால், ஒட்டுமொத்த உலகமும் நன்மை அடையும் என்றும் புல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பல சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் வீட்டில் உள்ள ஏசியைப் பற்றிப் பெருமையாகப் பேசியதோடு, அதைப் பயன்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினர்.

வெப்பத்தால் மக்கள் இறந்துகொண்டிருந்தபோது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலைகளில் கவனம் செலுத்தியதற்காக புல்வர் கேலி செய்யப்பட்டார்.
பிரான்சில் குளிரூட்டும் சாதனங்கள் கண்டிப்பாக சட்டவிரோதமானவை அல்ல என்றாலும், அரசாங்கக் கட்டுப்பாடுகள், புவி வெப்பமயமாதல் குறித்த கவலைகள் மற்றும் அதிக எரிசக்தி செலவுகள் காரணமாக அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
வீட்டிற்குள் நிலவிய கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க, பாரிஸ் நகர மக்கள் திறந்தவெளியில் தூங்கவும் பொதுவான நீர்நிலைகளில் நீந்தவும் தொடங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |