உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வுகள்: ஜேர்மன் பொலிசார் விசாரணை
உக்ரைன் நாட்டை ரஷ்யா ஊடுருவியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேர்மனியில் பல இடங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்துள்ள நிலையில், ஜேர்மன் பொலிசார் அது தொடர்பான விசாரணைகளைத் துவங்கியுள்ளார்கள்.
140க்கும் மேற்பட்ட அவ்வித விசாரணைகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பல, ரஷ்ய கொடிகள் மற்றும் ரஷ்ய ஊடுருவலை ஆதரிக்கும் ‘Z’ என்ற எழுத்தை பயன்படுத்துவது தொடர்பானவை ஆகும்.
ஜேர்மன் மாகாணங்கள் பல, அந்த எழுத்தை சட்ட விரோத உக்ரைன் ஊடுருவலுக்கு ஆதரவானது என்று வகைப்படுத்தியுள்ளன.
பொது இடங்களில் அந்த அடையாளத்தை ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலுடன் தொடர்புபடுத்தி, ரஷ்யப் போருக்கு ஆதரவாக பயன்படுத்துவது, விசாரணைக்கு வழிவகுக்கும் என Magdeburg மாகாண உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் அதிக மக்கள் வாழும் மாகாணமாக North Rhine-Westphaliaவில், உள்துறை அமைச்சகம் இதுவரை 37 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
அவற்றில் 22 வழக்குகள், ரஷ்ய இராணுவ தளபதிகளுக்கு ஆதரவாக ‘Z’ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பானவையாகும்
அத்துடன், பல இடங்களில் போருடன் தொடர்புபடுத்தி கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கும் ‘Z’ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யக் கொடிகளை அசைத்தவண்ணம் நடத்தப்படும் பேரணிகளை ஒழுங்கு செய்தவர்களோ, தாங்கள் போருக்கு ஆதரவளிக்கவில்லை என்றும், ஜேர்மனியில் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கெதிராக பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராகவே பேரணிகள் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.