மீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி
பிரித்தானியாவை மீண்டும் ஒரு புயல் தாக்க இருக்கும் நிலையில், அதற்கு எவர்ட் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தில் ஏற்கனவே பெய்த மழை லண்டனை தலைகீழாக புரட்டிப்போட்டு, மருத்துவமனைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு புயல் பிரித்தானியாவை தாக்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று Northamptonshireஇல் பெய்த கல்மழையால் கார்களிலுள்ள அலாரங்கள் தொடர்ந்து ஒலி எழுப்பியவண்ணம் இருந்தன.
சில இடங்களில் ஒரு மணி நேரத்தில் 35 மில்லிமீற்றர் மழை வரை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவை எவர்ட் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்க உள்ளது. மணிக்கு 75 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று தொடங்கி நாளை வரை பலத்த காற்றும் கன மழையும் பிரித்தானியாவின் தெற்கு பகுதியை தாக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தெற்கு இங்கிலாந்தின் பல இடங்களுக்கு இன்றும் நாளையும் ஆம்பர் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிப்பு, மின் தடை, கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படலாம் என்றும், வேகமாக வீசும் காற்றினால் பறக்கும் பொருட்களால் காயங்களும் உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.