ஜேர்மனிக்கு திரும்பும் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்தாக வேண்டும்: முன்னணி மருத்துவர்
ஜேர்மனிக்கு திரும்பும் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்தாகவேண்டும் என்கிறார் முன்னணி மருத்துவர் ஒருவர்.
அதாவது ஜேர்மனிக்கு திரும்பும் யாரானாலும், அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தாலும் சரி, கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தாகவேண்டும் என்கிறார் உலக மருத்துவ கூட்டமைப்பின் தலைவரான Frank Ulrich Montgomery.
தடுப்பூசிக்கு தப்பும் கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி பெற்றும் சிலருக்கு அறிகுறிகளுடனான கொரோனா தொற்று ஏற்படுவது தெரியவந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை சரியானதுதான் என்கிறார் அவர்.
ஆகத்து 1 முதல் ஜேர்மனிக்கு திரும்பும் யாரானாலும், அவர்கள் 12 வயதுக்கு மேற்பட்டவர்களானால், அவர்கள் தடுப்பூசி பெறாதவர்களாகவோ, கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுபடாதவர்களாகவோ இருந்தால், அவர்கள் ஜேர்மனிக்குள் நுழையும்போது கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்றொரு கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் காரில் பயணித்தாலும் சரி, ரயிலில் பயணித்தாலும் சரி, விமானத்தில் பயணித்தாலும் சரி...
ஆனால், தடுப்பூசி பெற்றிருந்தாலும், கொரோனாவிலிருந்து விடுபட்டிருந்தாலும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்தாகவேண்டும் என்கிறார் Montgomery. வெளிநாடு செல்ல உங்களுக்கு வசதி இருக்குமானால், உங்களால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் முடியும் என்கிறார் அவர்.