உள்ளாடையுடன் புகைப்படம்... எப்ஸ்டீன் தொடர்பால் பதவி துறந்த முன்னாள் பிரித்தானிய தூதர்
அமெரிக்காவிற்கான முன்னாள் பிரித்தானிய தூதர் ஒருவர் எப்ஸ்டீன் தொடர்புகள் அம்பலமான நிலையில், தற்போது லேபர் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
உள்ளாடைகளுடன்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணங்களில், லார்டு பீற்றர் மாண்டல்சன் என்பவர் எப்ஸ்டீனிடம் இருந்து 75,000 டோலர் பெற்றிருந்ததும் அம்பலமான நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான லேபர் கட்சியில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

2003 மற்றும் 2004-க்கு இடையில், எப்ஸ்டீன் 25,000 டொலர் மதிப்புள்ள மூன்று தனித்தனி கொடுப்பனவுகளை மாண்டல்சன் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
எப்ஸ்டீன் ஆவணங்களின் சமீபத்திய தொகுப்பில், முன்னாள் பிரித்தானிய தூதரான மாண்டல்சன் தனது உள்ளாடைகளுடன் இருக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
திருத்தப்பட்ட அந்தப் படத்தில், மாண்டல்சன் உள்ளாடையுடன் முகம் மறைக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அருகில் நின்று கொண்டிருப்பது காணப்படுகிறது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் எப்போது, எங்கு எடுக்கப்பட்டன என்பது தொடர்பில் தகவல் இல்லை.
இந்த நிலையில், தற்போது 72 வயதாகும் அந்த அரசியல்வாதி, தன்னால் அந்த இடத்தையோ அல்லது அந்தப் பெண்ணையோ அடையாளம் காண முடியவில்லை என்றும், அந்தச் சூழ்நிலைகள் என்னவாக இருந்தன என்பதைப் பற்றித் தன்னால் சிந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மே 2003-ல் நடந்த முதல் பரிவர்த்தனையானது, மாண்டல்சனின் கூட்டாளியான ரெய்னால்டோ டா சில்வாவின் பெயரில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது.
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிவர்த்தனைகள், மாண்டல்சனுடன் மட்டுமே தொடர்புடைய HSBC கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
மட்டுமின்றி, 2009-2010 காலகட்டத்தில் எப்ஸ்டீன், டா சில்வாவுக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் தொகையை செலுத்தியதைக் குறிப்பிடும் மின்னஞ்சல்கள் அந்த ஆவணங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மனம் வருந்துவதாக
கோர்டன் பிரவுனின் அரசாங்கத்தில் வணிகச் செயலாளராக இருந்தபோது, எப்ஸ்டீனின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, வங்கியாளர்களின் போனஸ் மீதான திட்டமிடப்பட்ட வரி தொடர்பான அரசாங்கக் கொள்கையை மாற்றுவதற்கு மாண்டல்சன் முயன்றார் என்பதையும் வெளியான ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளது.
மாண்டல்சன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, 2003-ஆம் ஆண்டில் எப்ஸ்டைனின் செலவில் மொத்தம் 7,486 டொலர் மதிப்புள்ள இரண்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்த தரவுகள் நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், லேபர் கட்சிப் பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகள் குறித்த சர்ச்சைக்காகத் தான் வருத்தப்படுவதாகவும், மனம் வருந்துவதாகவும் மாண்டல்சன் குறிப்பிட்டார்.
ஆனால் முன்னாள் அமைச்சரான மாண்டல்சன், வெளியிடப்பட்ட ஆவணங்கள் உண்மையானவையா என்பது தனக்குத் தெரியாது என்று ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
முன்னாள் லேபர் கட்சி அரசியல்வாதியான மாண்டல்சன், எப்ஸ்டீனுடனான அவரது தொடர்புகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |