கூகுள் வேலையை விட்டுவிட்டு பார்பிக்யூ உணவகம் தொடங்கி கோடீஸ்வரர் ஆன டெக்கி
Google-ல் பணியாற்றிய தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் வேலையை விட்டுவிட்டு பார்பிக்யூ உணவகம் தொடங்கி இன்று பல கோடிகளை ஈட்டிவருகிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், 14 ஆண்டுகள் மைக்ரோசாஃப்ட், கூகுள், யூடியூப், க்ரூயிஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய சலாஹுதீன் அப்துல்-காஃபி (35), வருடத்திற்கு ரூ.4.2 கோடி ($450,000) சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு, தனது கனவு திட்டமான ஹலால் பார்பிக்யூ உணவகத்தை தொடங்கினார்.

அப்துல்-காஃபி, தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய காலத்தில், “வாழ்க்கையை மேம்படுத்துவதை விட பணம் சம்பாதிப்பதே முக்கியமாகிறது” என்ற மனச்சோர்வால், அதிக சம்பள கிடைக்கும் தனது வேலையை விட்டு, ஒரு மதம் சார்ந்த நல அமைப்பில் சேர்ந்தார்.
அதே நேரத்தில், நண்பர்களுக்காக பார்-பிக்யூ விருந்து ஏற்பாடு செய்தபோது, அவரது தனித்துவமான சமையல் திறன் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன் மூலம், 2024 டிசம்பரில் “Kafi BBQ” என்ற உணவகத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் மூன்று நாட்களுக்கு போதுமான அளவு உணவு தயாரித்திருந்தாலும், முதல் நாளிலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. அன்றிரவு மீண்டும் சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மிகக் குறுகிய காலத்தில், அவரது உணவகம் டெக்சாஸ் மாநிலம் முழுவதும், பின்னர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது. 2025-ல் ரூ.21.7 கோடி (2.3 மில்லியன் டொலர்) வருவாய் ஈட்டிய அவர், 2026-ல் ரூ.37.8 கோடி (4 மில்லியன் டொலர்) வருவாய் பெறும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்துல்-காஃபி இன்னும் தனக்கென சம்பளம் வழங்கவில்லை. தனது சேமிப்பிலேயே வாழ்ந்து வருகிறார். உணவகத்தின் மாதாந்திர செலவுகள் ரூ.1.7 கோடி (215,000 டொலர்) ஆகும். இதில் உணவுப் பொருட்களுக்கு ரூ.1 கோடி, ஊழியர்களுக்கு ரூ.41 லட்சம், வாடகைக்கு ரூ.12 லட்சம் செலவாகிறது என கூறியுள்ளார்.
அவரது கதை, திறமை இருந்தால் அதிக சம்பளம் தரும் வேலையையும் விட்டு, கனவை பின்தொடர்ந்தால் வெற்றி பெறலாம் என்ற கருத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
தொழில்நுட்ப துறையில் இருந்து உணவகத் துறைக்கு மாறிய அவரது பயணம், பலருக்கும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |