எக்கச்சக்கமாக அதிகரித்த கொரோனா தொற்று: கோவிட் மையப்புள்ளியாக மாறியுள்ள பெர்லின் நகரின் நிலைமை...
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெறிச்சோடிப்போயிருக்கிறது ஜேர்மன் தலைநகரமான பெர்லின்...
ஓரிடத்தில், நான்கு பேர் கையில் ஷாம்பெய்ன் கோப்பைகளுடன் நிற்கிறார்கள். விடயம் என்னவென்றால், அவர்களில் Angela மற்றும் Johannes என்னும் ஜோடிக்கு அன்று திருமணம். கோலாகலமாக நண்பர்கள் உறவினர் கூடி திருமணம் செய்வதற்கு மாறாக, மொத்தம் ஏழு பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், திருமணப் பதிவு அலுவலகத்தில் 15 நிமிடங்களுக்குள் முடிந்த நடைமுறைகளைத் தொடர்ந்து, சாலையோரம் அமைந்திருக்கும் ஒரு நாற்காலியில் கேக் ஒன்றை வெட்டி, நண்பர்களுடன் தங்கள் திருமணத்தைக் கொண்டாடுகிறார்கள் Angelaவும் Johannesம்!
இப்படி சாலைகளெல்லாம் வெறிச்சோடிப் போயிருக்க, நகரின் சில இடங்களில் மட்டும் நீண்ட வரிசையில் மக்கள். அவர்கள் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் நிற்பவர்கள் அல்ல, கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக வரிசையில் நிற்பவர்கள்.
தடுப்பூசி பெறுவதற்காக மணிக்கணக்காக அவர்கள் காத்திருக்க, இன்னொரு பிரச்சினையை சந்தித்து வருகின்றன தடுப்பூசி மையங்கள்.
ஆம், தடுப்பூசி மையங்களில் வேலை செய்யும் ஊழியர்களில் பலருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதைத் தொடர்ந்து, மையங்களில் வேலை செய்ய ஊழியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடைகளைப் பொருத்தவரை இன்னமும் பொருட்கள் சேமிப்பில் உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படும் ஒரு நிலைமை இப்போதைக்கு இல்லை என கருதப்படுகிறது.
ஆனால், நகரின் உள்கட்டமைப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் விரைவில் இந்த வாரத்தில் சில வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.
ஆக, கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கொரோனா மையமாகிப்போன ஜேர்மன் தலைநகரமான பெர்லின், கடுமையான உள்கட்டமைப்புச் சவால்களை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.