ரகுராம் ராஜன் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பு ஆலோசனை குழு
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை போக்க, முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதல்வராக மு. க ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், 16வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இதில், தமிழ்நாடு அரசு இனி அறிவிக்க போகும் திட்டங்கள், அறிவிப்புகளை சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக, அரசுக்கும் முதலமைச்சருக்கும் ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இந்த சிறப்புமிக்க குழுவில் இடம்பெற உள்ளனர்.
பொருளாதார துறையில் வல்லுனர்களாக விளங்கும் இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றிருப்பது தொடர்பான அறிவிப்பு தற்போது பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது.