ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்க விரும்பும் புதிய கூட்டணி அரசின் திட்டங்கள் என்னென்ன?
ஜேர்மனியில் புதிதாக பொறுப்பேற்கும் கூட்டணி அரசு ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் வகையில், என்னென்ன திட்டங்களை அது வைத்துள்ளது என்பது குறித்த சில தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதுவரை, ஒருவர் ஜேர்மன் குடியுரிமை பெறவேண்டுமானால், தான் முதலில் கொண்டிருந்த குடியுரிமையைக் கைவிடவேண்டும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனால், தற்போது ஜேர்மனியில் புதிதாக பொறுப்பேற்கும் அரசியல் கட்சிகள், இனி மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்துக்கொள்ள அனுமதிப்பது குறித்த திட்டங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், குடியுரிமை பெறுதலை வேகப்படுத்தும் சில திட்டங்களும் புதிய அரசால் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஜேர்மனியில் பிறந்த குழந்தைகள், அவர்களது பெற்றோரில் ஒருவராவது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கும்பட்சத்தில், அந்த குழந்தைகளுக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்படும்.
குடியுரிமைத் தேர்வு
இதுவரை, ஜேர்மானியர்கள் அல்லாதவர்கள் ஜேர்மானியர் ஒருவரை திருமணம் செய்திராத பட்சத்தில், அவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கவேண்டுமானால், தொடர்ந்து எட்டு ஆண்டுகள் சட்டப்படி ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற நிலை இருந்தது.
அது, இனி, ஒருங்கிணைப்பு வகுப்புகள் (integration course) முடித்திருந்தால் ஏழு ஆண்டுகளாகவும், ஜேர்மன் மொழித்திறனில் level B1க்கு அதிகமாக பெற்றிருந்தால், ஆறு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட உள்ளது.
Guest-worker generation என்ற வகைப்பிரிவினருக்கு எளிதாக்கப்படும் நடைமுறை
இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஜேர்மனியை மீண்டும் கட்டி எழுப்ப உதவியாக இருந்தவர்களான, Guest-worker generation என்ற வகைப்பிரிவினர் ஜேர்மன் குடியுரிமை பெறும் நடைமுறையை எளிதாக்கவும் புதிய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரித்தானிய மற்றும் ஜேர்மன் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தபின் ஜேர்மன் குடியுரிமை பெறலாம்.
அதாவது, புதிய விதிமாற்றங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், ஜேர்மன் குடியுரிமை பெற்றாலும், தங்கள் முந்தைய குடியுரிமையையும் தக்கவைத்துக்கொள்ளலாம்.
புகலிடம் வழங்குதல், நாடுகடத்துதல் மற்றும் அகதிகள் நிலை
புதிய அரசு, புகலிடம் வழங்குதல், நாடுகடத்துதல் மற்றும் அகதிகள் நிலை ஆகியவை தொடர்பில் கொள்கை மாற்றங்களை திட்டமிட்டுள்ளன. ஜேர்மனியில், நியாயமான, வேகமான மற்றும் சட்டப்படியான புகலிட நடைமுறைகளை செயல்படுத்த தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக புதிய அரசு தெரிவித்துள்ளது.
எளிமையாகக் கூறினால், நாடுகடத்தப்பட முடியாதவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க இருப்பதாகவும், நாடுகடத்தப்படவேண்டியவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவதை எளிதாக்க இருப்பதாகவும் புதிய அரசு தெரிவித்துள்ளது.
வாழிட உரிமம் வழங்கப்படாதவர்கள், அதே நேரத்தில் நாடுகடத்தப்பட முடியாதவர்கள், அதாவது, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள், அதே நேரத்தில், அவர்களது சொந்த நாட்டில் நிலவும் போர் முதலான சூழல் காரணமாக அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட முடியாதவர்களுக்கு, ஒரு ’opportunity residence permit’ என்னும் வாழிட உரிமம் வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும், ஜேர்மன் மொழி பேசுபவர்களாக இருக்கவேண்டும், குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருக்கக்கூடாது மற்றும் ஜேர்மன் சமூகத்தின் அடிப்படை சட்ட திட்டங்களுக்கு தங்களை அர்ப்பணிப்பவர்களாக இருக்கவேண்டும். இந்த வாழிட உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
அதேநேரத்தில், ஆபத்தானவர்கள் என கருதப்படும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் நாடுகடத்தப்படுதல் வேகப்படுத்தப்படும் என்பதும் புதிய அரசின் திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.