சார்லஸ் மன்னரானதால் பிரித்தானிய பணத்தில் இருக்கும் மகாராணியாரின் உருவம் நீக்கப்படுமா?: இங்கிலாந்து வங்கி அளித்துள்ள விளக்கம்...
சார்லஸ் மன்னரானதால், பிரித்தானிய பணத்தில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது முதலான பல கேள்விகள் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
பணம் தொடர்பான கேள்விக்கு தற்போது இங்கிலாந்து வங்கி பதிலளித்துள்ளது.
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய கீதம் முதல் பல விடயங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரித்தானிய பணத்தில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால், அவரது மறைவுக்குப் பின் என்ன ஆகும், மகாராணியாரின் உருவம் நீக்கப்படுமா, அப்படி நீக்கப்பட்டால் ஏற்கனவே இருக்கும் பணத்தை என்ன செய்வது, நாணயங்களை உருக்கி மன்னர் உருவம் பொறிக்கப்பட்ட புது நாணயங்களை உருவாக்கலாம். கரன்சி நோட்டுக்களை என்ன செய்வது, இதற்கெல்லாம் செலவாகுமே, மக்கள் பணம் வீணடிக்கப்படுமோ என்றெல்லாம் மக்கள் மனதில் கேள்விகள் எழுந்தன.
Image: Rasid Necati Aslim/Anadolu Agency/Getty Images
தற்போது அந்த கேள்விகளுக்கான பதிலை இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.
அதாவது, மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட பணம் தொடர்ந்து பயன்பாட்டிலிருக்கும். அதே நேரத்தில் புதிதாக, மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட பணமும் அச்சிடப்படும்.
இரண்டுமே சம காலத்தில் பயன்பாட்டிலிருக்கும் என இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட பணம், மற்றும் மன்னர் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட பணம், இரண்டையுமே சம காலத்தில் மக்கள் பயன்படுத்தலாம்.
Image: PA Wire/PA Images
புதிதாக மன்னர் பதவியேற்றுள்ள விடயம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க ராஜகுடும்பத்தினர் விரும்புகிறார்கள். அதாவது தேவையற்ற செலவையும், தேவையற்ற குழப்பங்களையும் தவிர்க்க அவர்கள் விரும்புவதால், இப்போதைக்கு அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது.
கரன்சி நோட்டுகள் பழமையாய்ப் போகும்போது அவை புழக்கத்திலிருந்து அகற்றப்படும். அப்படிப் பார்த்தால், மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மிக நீண்ட காலத்துக்குப் புழக்கத்தில் இருக்கும் என்றே தோன்றுகிறது.