ஈரான் - அமெரிக்க சமாதான ஒப்பந்தம்... இந்தியாவின் வேளாண் ஏற்றுமதிக்கு சாதகம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்படுவதால், வளைகுடா பிராந்தியத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்தியாவின் விவசாயப் பொருட்களுக்கான ஏற்றுமதி எளிதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 சதவீதத்திற்கும் அதிகமாக
மேற்கு ஆசியாவிற்கான பாஸ்மதி அரிசி, வெங்காயம், மிளகாய், மாதுளை, வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பிற விரைவில் கெட்டுப்போகும் பொருட்களின் ஏற்றுமதி நீரிணை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டது.

இது இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. மட்டுமின்றி, இப்பிராந்தியத்தின் மிக பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில், பிப்ரவரி 28 முதல் சரக்குக் கையாளுதல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
மேலும், இயல்பான அளவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு உயர்ந்து, சரக்கு அனுப்பீடுகளைக் கடுமையாகப் பாதித்திருந்த சரக்குக் கட்டணங்கள் தணியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புச் சூழல் காரணமாகத் தடைபட்டிருந்த, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற விரைவில் கெட்டுப்போகக்கூடிய சரக்குகளை துபாய் வழியாக சவுதி அரேபியா, கத்தார் மற்றும் குவைத்திற்கு அனுப்பும் பணி, நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் நிலையில் ஏற்றுமதியும் மீண்டும் தொடங்கலாம்.
மத்திய கிழக்கில் அதிகரித்திருந்த புவிசார் அரசியல் அபாயங்கள் காரணமாகக் கணிசமாக உயர்ந்திருந்த கப்பல் போக்குவரத்துக்கான காப்பீட்டுக் கட்டணங்கள், அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலைநாட்டப்படுவதால் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை மற்றும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் முதல் செங்கடல் நெருக்கடியால் ஏற்பட்ட இடையூறுகள் வரை, அரிசித் துறை தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது என முன்னணி ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தடைகள் அரிசி வர்த்தகத்தைச் சரிவின் விளிம்பிற்குக் கொண்டு சென்றன; இதன் விளைவாக, பிப்ரவரி முதல் ஏற்றுமதியில் மாதந்தோறும் கடுமையான சரிவு ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி ஏற்றுமதியை அதிகரிக்க
இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளின் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதால், தளவாடச் செலவுகள் குறையும் என்றும், கப்பல்கள் வந்து செல்லும் நேரம் மேம்படும் என்றும், நிலுவையில் உள்ள சரக்குகள் விரைவாக அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன், ஈரான், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய சந்தைகளுக்கு அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும் என்கிறார் முன்னணி அரிசி ஏற்றுமதியாளர் ஒருவர்.
ஒட்டுமொத்த விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2025-ஆம் ஆண்டில் 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள இந்தியாவின் மொத்த உணவுப் பொருள் ஏற்றுமதியில் மேற்கு ஆசியா 21.8% பங்களிப்பை அளித்தது; இதன் மூலம் அரிசி, வாழைப்பழம், நறுமணப் பொருட்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
இதற்கிடையில், 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில், முந்தைய நிதியாண்டின் (FY26) இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் அரிசி மற்றும் பழங்கள்-காய்கறிகள் ஏற்றுமதி முறையே 0.71 சதவீதம் மற்றும் 14.67 சதவீதம் சரிந்து, முறையே 2.03 பில்லியன் டொலராகவும் 0.59 பில்லியன் டொலராகவும் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |