லண்டனில் ஜூலை-19க்கு பிறகும் முகக்கவசம் கட்டாயம்!
ஜூலை 19-க்குப் பிறகும் லண்டன் மக்கள் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட உள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட போதிலும், பொது போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்து முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனிடம் (TFL) லண்டன் மேயர் சாதிக் கான் கேட்டுக் கொண்டார்.
ஊழியர்கள் தொடர்ந்து முக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு டி.எஃப்.எல் நிறுவனத்திடம் மேயர் கேட்டுக் கொண்டார். விலக்கு பெற்றவர்கள் மட்டுமே மாஸ்க்கை பயன்படுத்த வேண்டியதில்லை.
டி.எஃப்.எல் இந்த திட்டங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது - அதாவது லண்டன் மக்கள் டியூப், ரயில்கள், பேருந்துகள், டாக்சிகள் மற்றும் தனியார் வாடகை வாகனங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு கூறப்படுவார்கள்.
'சுதந்திர தினம்' என்று அழைக்கப்படும் ஜூலை-19 முதல் கிட்டத்தட்ட அனைத்து கோவிட் வரம்புகளும் நீக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமையன்று உறுதிப்படுத்தினார்.
அப்போது, மக்கள் முக்கவசம் அணிவது இனி கட்டாயமாக இருக்காது, முகக்கவசம் அணிவது அவரர் தனிப்பட்ட விருப்பம் என்று அறிவித்தார். இருப்பினும், பொது போக்குவரத்து சேவைகள் போன்ற 'நெரிசலான மற்றும் மூடப்பட்ட இடங்களில்' மக்கள் தொடர்ந்து அணிய வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறேன் என்றும், பொதுமக்கள் மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுப்பார்கள் என்றும் நம்புகிறேன் என்றும் கூறினார்.