வேட்டையாடும் தாலிபான்கள்... ஆப்கன் முக்கிய புள்ளிகளுக்கு பிரித்தானியாவின் கோர முகம்
தாலிபான்களால் வேட்டையாடப்படும் ஆப்கானிஸ்தானின் 35 நீதிபதிகளுக்கு விசா மறுத்துள்ள நிலையில், பிரித்தானியா சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளதுடன், தற்போது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில்,
பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவத்திற்காக மொழிப்பெயர்ப்பாளர்களாக செயல்பட்டவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பொறுப்பு வகித்த பலரும் தற்போது தாலிபான்களின் வேட்டையாடலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த நிலையிலேயே 35 நீதிபதி, பெரும்பாலும் பெண்கள், பிரித்தானியாவில் குடிபெயர விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது தாலிபான்களுக்கு பயந்து தலைமறைவாக உள்ளனர்.
மட்டுமின்றி, பெண் நீதிபதிகள் பலரையும் தாலிபான்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் மட்டுமின்றி, தற்போது மீண்டும் உருவெடுத்துள்ள மத அடிப்படைவாதிகளும் குறித்த நீதிபதிகளுக்கு எதிராக குரல் எழுப்பவும், இவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என தாலிபான்களுக்கு நெருக்கடி அளித்தும் வருவதாக தெரிய வந்துள்ளது.
உண்மையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடனே, நீதித்துறையை கட்டமைக்கவும், புதிய ஆப்கானிஸ்தானை உருவாக்கவும் இவர்கள் இதுவரை முயன்று வந்துள்ளனர். ஆனால் அந்த நீதிபதிகளுக்கு தற்போது விசா மறுத்ததன் மூலம் தமது கோர முகத்தை பிரித்தானியா காட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பிரித்தானியாவின் முன்னணி சட்ட நிறுவனமான Mishcon de Reya ஆப்கன் நீதிபதிகளுக்காக களமிறங்கியுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த முடிவை சட்டத்தால் எதிர்கொள்ள இருப்பதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளதுடன், அதற்கான தரவுகளை தாக்கல் செய்யவும் உள்ளது.
ஆப்கன் நீதிபதிகள் தங்கள் உயிருக்கு பயந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு விசா மறுப்பது என்பது அவர்களை மரணத்திற்கு தள்ளிவிடுவது போன்றது என்கிறார் முதன்மை சட்டத்தரணி Maria Patsalos.
ஆனால் இந்த விவகாரத்தில் தகுதியை ஆராய்ந்து அரசாங்கம் உரிய காலத்தில் முடிவெடுக்கும் என்றே பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.