வீட்டுத் திண்ணையில் மூச்சு பேச்சின்றி கிடந்த நபர் மரணம்: தகவல் தெரிவிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் நந்தன்கோடு பகுதியில், தனது வீட்டுத் திண்ணையில் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார் 45 வயதான மனோஜ் குமார்.
இதை காண நேர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சேர்ப்பித்த சில நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.
இதனையடுத்து, மனோஜ் குமார் இறந்த தகவலை அறிவிக்க, அவரது வீட்டுக்கு திரும்பிய அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
குடியிருப்பின் உள்ளே மனோஜ் குமாரின் மனைவி ரஞ்சு(38) மகள் அம்ருதா(16) ஆகியோர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த இந்த குடும்பம் நந்தன்கோடு பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இலக்காகியுள்ளார் மனோஜ். மட்டுமின்றி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வைத்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்திருந்தார்.
அதற்கான காப்பீடு தொகையும் தாமதமாகியுள்ளது. மேலும் தொடர்ந்து ஊரடங்கு காரணமாக தனது கடையும் திறக்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையிலேயே மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.