பற்களை பிடுங்கி, வன்கொடுமை: அமீரக சிறையில் கொடூர சித்திரவதையை அனுபவிக்கும் பிரித்தானியர்
ஐக்கிய அரபு அமீரக சிறையில் பிரித்தானியர் ஒருவர் சித்திரவதை செய்யப்படுவதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமீரக சிறையில்
பிரித்தானியாவைச் சேர்ந்த ரியான் பெப்பர் (27) என்ற நபர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரது குடும்பத்தினர் இன்னும் அறியாமல் உள்ளனர்.
இந்த சூழலில், பெப்பர் தனது குடும்பத்தினருக்கு தான் இரகசியமாக அனுப்பிய கடிதங்களிலும், பல நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடல்களின் போதும், புரிந்துகொள்ள முடியாத கொடுமைகளை அனுபவித்ததாக விவரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தடுப்புக்காவல் நிலையத்தில் பெப்பர் தாக்கப்பட்டதாகவும், அச்சுறுத்தப்பட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
துபாய்க்கு அருகிலுள்ள ஷார்ஜா தடுப்பு மையத்தில், 8 பிரித்தானியர்கள் உட்பட மேலும் 14 கைதிகளுடன் பெப்பர் அடைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அந்தக் குழுவினர் தினசரி வன்முறையை எதிர்கொண்டதுடன், அவர்களுக்கு நியாயமான நீதித்துறை செயல்முறையும் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் மீதான துன்புறுத்தல்களில், இடுக்கி கொண்டு நான்கு பற்களை பிடுங்குதல், கிட்டத்தட்ட நூறு நாட்கள் தூங்க விடாமல் வைத்திருத்தல் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
கைகள் நொறுக்கப்படும்
இல்லையெனில், அவரது கைகள் நொறுக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் இருந்ததாக பெப்பர் கூறுவதை குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.
ரியான் பெப்பரின் சகோதரியான குளோயி, 'அவர் (ரியான்) கண்களைக் கட்டப்பட்டு, வாய் அடைக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டார்' என்று டெய்லி மெயில் ஊடகத்திடம் கூறினார்.
இதற்கிடையில், ரியான் பெப்பரின் தயாரான ஜூலி 'Detained in Dubai' அமைப்பின் உதவியுடன் மகனுக்கான போராட்டத்தினை, அவர் பெரும்பாலும் தனியொருவராகவே முன்னெடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |