இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான குழந்தையின் காலில் இருந்த காயம் புற்றுநோயான பரிதாபம்... தற்போது கிடைத்துள்ள ஒரு நல்ல செய்தி
பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான அழகுக் குழந்தை ஒன்றின் காலில் இருந்த ஒரு காயம் புற்றுநோய் என தெரியவந்தபோது, அந்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது.
லண்டனில் வாழும் ரிஷ்யா நடேஸ்வரன் (44), கவிதா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள். ரியா மூத்தவள், ஈஷா (4) இளையவள்...
மே மாதம் 13ஆம் திகதி, ஈஷாவின் கால்களில் காயம் ஒன்று இருப்பதைக் கவனித்துள்ளனர் அவளது பெற்றோர். மருத்துவமனைக்கு அவளைக் கொண்டு சென்றபோது, அந்த காயம் தங்கள் வாழ்வையே மாற்றப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அந்த காயம் தங்கள் வாழ்வையே மாற்றப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஆம், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய செய்தி இடி போல் இறங்கியது அந்த குடும்பத்தின் மீது. ஈஷாவின் காலில் இருந்த காயம் உண்மையில் மிகக் கொடிய acute myeloid leukaemia என்னும் ஒருவகை புற்றுநோய் என தெரியவந்தபோது குடும்பமே ஆடிப்போனது.
அழகே உருவான ஈஷாவுக்கு கொடுமையான கீமோதெரபி சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அந்த சிகிச்சை பலனளிக்காததால் மீண்டும் ஒரு பயங்கர செய்தியை தெரிவித்தனர் மருத்துவர்கள். மகளுக்கு புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டு துவண்டு போயிருந்த பெற்றோருக்கு அந்த செய்தி இடி மேல் இடி விழுந்தது போலிருந்தது. ஆம், ஈஷா இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாள் என்ற பயங்கர செய்தியை தெரிவித்தனர் மருத்துவர்கள்.
அவளைக் காப்பாற்ற வேண்டுமானால், அவளது உடலுக்குப் பொருத்தமான ஒருவர் ஸ்டெம் செல் தானம் வழங்கவேண்டும், அதுவும் மூன்று வாரங்களுக்குள்... பிரித்தானிய மருத்துவமனைகளில் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த ஸ்டெம் செல் தானம் வழங்க பதிவு செய்துள்ளவர்கள் அபூர்வம். ஈஷா இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவள் என்பதால், அவளுக்கு ஒரு தெற்காசியரின் ஸ்டெம் செல்கள்தான் பொருந்தும். அதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. தானம் செய்ய ஒருவர் முன்வரவேண்டும், அவரது ஸ்டெம் செல்கள் ஈஷாவுக்கு பொருந்தவேண்டும். தானம் செய்பவர் ஆய்வக சோதனைகள் செய்ய ஒப்புக்கொள்ளவேண்டும் என ஏராளம் பிரச்சினைகள்...
என்றாலும், ஈஷாவின் தந்தை ரிஷ்யாவும், தாய் கவிதாவும், அத்தை லாவண்யாவும் ஆளுக்கொரு பக்கம் ஈஷாவுக்காக ஸ்டெம் செல் தானம் செய்ய வருமாறு கோரிக்கை விடுத்தார்கள்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஈஷா புன்னகை மாறாத முகத்துடனேயே இருக்கிறாள். ஆனால், மகளின் நிலையை எண்ணி குடும்பம் மன ரீதியாக தொய்ந்து போயிருந்தது.
இந்நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஆம், நேற்று ஈஷாவுக்கு ஸ்டெம் செல் தானம் செய்யும் ஒருவர் கிடைத்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஈஷா நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழவேண்டும், அவளுக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர் ஈஷாவின் குடும்பத்தினர்.