தமிழன் நடராஜனுக்கு இந்திய அணியில் இடமில்லையா? பிரபல வீரரை விமர்சிக்கும் ரசிகர்கள்
முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிட்டீண்டர் சிங் சோதி எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்துள்ள நிலையில் அதில் தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற உள்ள டி.20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் துபாய் மற்றும் ஓமனில் வைத்து நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரிட்டீண்டர் சிங் சோதி, எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். சோதி தனது அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுலை எடுத்துள்ளார். மூன்றாவதாக ஷிகர் தவானையும் தனது அணியில் எடுத்துள்ளார்.
ஷிகர் தவான் இலங்கை தொடரில் பெரிதாக சோபிக்க விட்டாலும் அவர் இந்திய அணியின் மேட்ச் வின்னர் என்பதை யாரும் மறந்துவிட கூடாது எனவும் சோதி தெரிவித்தார்.
மிடில் ஆர்டரில் விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ள சோதி, விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்துள்ள சோதி, தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு இடம் கொடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையிலும் நடராஜனை புறக்கணித்துள்ள சோதி புவனேஷ்வர் குமார், பும்ராஹ், தீபக் சாஹர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு தனது அணியில் இடம் கொடுத்துள்ளார்.
இதனிடையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜனை உங்கள் அணியில் ஏன் சேர்க்கவில்லை என ரசிகர்கள் பலரும் ரிட்டீண்டர் சிங் சோதியை நோக்கி சமூகவலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
ரிட்டீண்டர் சிங் சோதி தேர்வு செய்துள்ள இந்திய அணி பின் வருமாறு.
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.