ஹர்திக் பாண்டியாவை காப்பாற்ற தமிழக வீரரை ஓரம்கட்ட நினைக்கிறாரா கேப்டன் ரோகித் சர்மா? ரசிகர்கள் கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடியாக ஆல்ரவுண்டராக ஒரு ரவுண்டு வந்தவர் ஹர்திக் பாண்டியா. பின்னர் காயம் காரணமாக கடந்த 2 ஐ.பி.எல். சீசன்களில் பாண்டியா சரிவர பந்துவீசுவதில்லை.
அப்படி வீசினாலும், அவரது பந்துவீச்சு எடுப்படுவதில்லை. இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக தான் தேவை. இதனால் டி-20 உலகக் கோப்பை போட்டியில் பலரது எதிர்ப்பையும் மீறி அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா முக்கிய போட்டிகளில் பந்துவீசவில்லை.
பேட்டிங்கிலும் பழைய அதிரடி தெரியவில்லை. இனி ஹர்திக் பாண்டியாவை நம்ப தேவையில்லை என்ற முடிவு எடுத்த தேர்வுக் குழுவினர், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கினர்.
அவருக்கு பதிலாக ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளங்கிய தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவின் இடம் கேள்விக்குறியானது.
இந்த நிலையில் தான் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல் ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச ரோகித் சர்மா வாய்ப்பே கொடுக்கவில்லை.
வெங்கடேஷ் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்துவிட்டால், ஹர்திக் பாண்டியா அணிக்குள் வர மாட்டார் என்பதால் ரோகித் சர்மா இப்படி திட்டம் போட்டு செய்கிறாரா என ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.